Published : 07 Apr 2021 03:15 AM
Last Updated : 07 Apr 2021 03:15 AM
திமுக வேட்பாளர் உதயநிதி, தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக, தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹுவிடம் அதிமுக சார்பில் நேற்று புகார் அளிக்கப்பட்டது.
இதுதொடர்பாக அதிமுக வழக்கறிஞர் அணி இணைச் செயலர் ஆர்.எம்.பாபு முருகவேல் அளித்த மனு:
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி திமுக வேட்பாளர் உதயநிதி, மயிலாப்பூர் தொகுதிக்கு உட்பட்ட எஸ்ஐஇடி மகளிர் கல்லூரி வாக்குச்சாவடி எண் 19-ல் வாக்களிக்க சென்றபோது, திமுக கொடியுடன் கூடிய உதிக்கும் சூரியன் சின்னம் பதிந்த சட்டையை அணிந்து சென்று வாக்களித்துள்ளார். இது தேர்தல் விதிமீறல் ஆகும்.
பிரச்சாரம் முடிந்த பிறகு, வாக்குப்பதிவு நிறைவடையும் வரை யாரும் வாக்கு சேகரிக்கும் விதமாகவோ, ஆதரவு திரட்டும் விதமாகவோ பிரச்சாரங்களில் ஈடுபடக் கூடாது என்பது விதி. ஆனால் தெரிந்தே உதயநிதி தேர்தல் விதிகளை மீறி, போட்டியிடும் சின்னமான உதிக்கும் சூரியனை சட்டைப் பையில் அணிந்து சென்றுள்ளார். எனவே, அவர் மீது தேர்தல் விதிமீறல் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT