Published : 23 Mar 2021 03:13 AM
Last Updated : 23 Mar 2021 03:13 AM

கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை அரசியல் கட்சி கூட்டங்களில் பின்பற்ற வேண்டும் : உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் அரசியல் கட்சிக் கூட்டங்களில் கரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை அண்ணா நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் முகமது ரஸ்வி, உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: தஞ்சாவூர் அரசு பள்ளி மாணவர்கள் 55 பேருக்கு சில நாட்களுக்கு முன்புகரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தினமும் 800 பேர் கரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.

தமிழகத்தில் கரோனா வழிகாட்டுதல்கள் தற்போதுவரை நடைமுறையில் உள்ளன. இருப்பினும் சமீப காலமாக அனைவரும் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளி போன்றவற்றை பின்பற்றுவது இல்லை. பொதுக்கூட்டங்களில் கரோனா வழிகாட்டு முறைகளைப் பின்பற்றாமல் மக்கள் அதிகளவில் கூடுகின்றனர்.

ரயில், பேருந்துகளில்..

இதனால், தமிழகத்தில் அரசியல் கூட்டங்கள், வணிக வளாகங்கள், பள்ளி, கல்லூரிகள், விமானம், ரயில், பேருந்துகளில் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறையாகப் பின்பற்ற உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் கே.நீலமேகம் வாதிட்டார். விசாரணையின்போது நீதிபதிகள், அனைத்து அரசியல் கட்சிக் கூட்டங்களிலும் பாகுபாடு இல்லாமல் முறையாகக் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைக் கடுமையாகப் பின்பற்ற வேண்டும் என்றனர்.

பின்னர் மனு தொடர்பாக தமிழக உள்துறை செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 3 வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x