Published : 23 Feb 2021 03:15 AM
Last Updated : 23 Feb 2021 03:15 AM

பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுகவினர் ஆர்ப்பாட்டம் சென்னையில் துரைமுருகன், தயாநிதி மாறன் பங்கேற்பு

சென்னை

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயுவிலை உயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக சார்பில்நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன், தயாநிதி மாறன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் திமுக சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

சென்னை தெற்கு மாவட்ட திமுக சார்பில் சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் மாவட்டச் செயலாளர் மா.சுப்பிரமணியன் எம்எல்ஏ தலைமையில் காலை 11 மணி அளவில் ஆர்ப்பாட்டம் நடந்தது. திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், தென்சென்னைஎம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன், எம்எல்ஏக்கள் வாகை சந்திரசேகர், புகழேந்தி, முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் பிரதமர் மோடி, முதல்வர் பழனிசாமிக்கு எதிராகவும், பெட்ரோல்,டீசல், சமையல் எரிவாயு விலையை குறைக்க வலியுறுத்தியும் கோஷமிட்டனர். பின்னர் துரைமுருகன் பேசியதாவது:

பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தால் அனைத்துப் பொருட்களின் விலையும் உயரும். அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படுவார்கள். மக்கள் நலன் கருதி பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மத்தியில் பெரும்பான்மை இருப்பதாலும், இன்னும் 3 ஆண்டுகளுக்கும் மேல் ஆட்சி இருப்பதாலும் பாஜக மக்களைப் பற்றி கவலைப்படாது. விலையை குறைக்க வேண்டும் என்ற அக்கறை அதிமுக அரசுக்கு இருந்தால் டெல்லி சென்று மத்திய அரசிடம் வலியுறுத்தி இருப்பார்கள். திமுக ஆட்சிக்கு வரும் என்பது அதிமுகவுக்கு தெரியும். பலமான எதிர்க்கட்சியாக அமரும் வகையிலாவது வெற்றி பெறபணியாற்றுமாறு அதிமுகவினருக்கு அமைச்சர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நீண்டகாலம் எம்எல்ஏவாக இருந்ததாலும், பொருளாதாரம் படித்தமாணவர் என்பதாலும் பெட்ரோல்,டீசல் விலையை எப்படி குறைக்கவேண்டும் என்பது எனக்குத் தெரியும். ஆனால், அதைச் சொன்னால் முதல்வர் பழனிசாமி இப்போதே செய்து விடுவார். ஏற்கெனவே, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சொல்வதையெல்லாம் முதல்வர் செய்து வருகிறார். திமுக ஆட்சிக்கு வந்ததும் விலையைக் குறைக்க ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பார். அது மற்ற மாநில முதல்வர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும். இவ்வாறு துரைமுருகன் பேசினார்.

சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், திமுக மாவட்டப் பொறுப்பாளர்கள் நே.சிற்றரசு (சென்னை மேற்கு), மயிலை த.வேலு (தென் மேற்கு), மு.க.தமிழரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சென்னை கடற்கரை சாலை இந்தியன் வங்கி அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக செய்தி தொடர்புசெயலாளர் டிகேஎஸ் இளங்கோவன் எம்.பி., சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் சேகர்பாபு எம்எல்ஏ, சென்னை வடக்கு மாவட்டபொறுப்பாளர் தா.இளைய அருணா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x