Published : 23 Feb 2021 03:15 AM
Last Updated : 23 Feb 2021 03:15 AM

நெல் கொள்முதல் செய்ய ஈரப்பத உச்சவரம்பு கூடாது பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

மழையால் சேதமடைந்த நெல் மூட்டைகளை ஈரப்பத உச்சவரம்பின்றி தமிழக அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் பிப்ரவரி மாத இறுதியில் விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களில் பெய்த மழை விவசாயிகளுக்கு மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. நெல் மூட்டைகள் எதிர்பாராத மழையில் சிக்கி சேதமடைந்திருக்கின்றன. இதனால் அம்மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 17 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்படும். ஆனாலும் விவசாயிகளின் நலன் கருதி இப்போது 20 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல் கொள்முதல் செய்யப்படுகிறது

இதை மேலும் தளர்த்தி, ஈரப்பதஉச்சவரம்பின்றி நெல் கொள்முதல் செய்யப்பட்டால் விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்பை ஓரளவு குறைக்க முடியும்.

சிறப்பு அனுமதி பெறவேண்டும்

எனவே, தமிழக அரசு உடனடியாக மத்திய அரசை தொடர்பு கொண்டு, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஈரப்பத உச்சவரம்பின்றி நெல்லை கொள்முதல் செய்ய சிறப்பு அனுமதி பெற வேண்டும். அதன்படி மழையில் நனைந்து சேதமடைந்த நெல் மூட்டைகளை கொள்முதல் செய்து, பாதிக்கப்பட்ட விவசாயி களின் நலன்களை தமிழக அரசு பாதுகாக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x