Published : 19 Feb 2021 03:23 AM
Last Updated : 19 Feb 2021 03:23 AM

மாற்றுத் திறனுடைய சிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்தி கொன்ற குஜராத் இளைஞருக்கு 3 தூக்கு தண்டனை புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மாற்றுத் திறனுடைய 17 வயது சிறுவனை பாலியல்ரீதியாக துன்புறுத்தி, கொலை செய்த குஜராத்மாநிலத்தைச் சேர்ந்த இளைஞருக்கு 3 தூக்கு தண்டனை விதித்து புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம் நேற்று அதிரடி தீர்ப்பளித்தது.

குஜராத் மாநிலம் நம்பர் 1 அம்பிகா பார்க் பகுதியைச் சேர்ந்தவர் அமரேந்திர பட்டேல் மகன் டானிஷ் பட்டேல்(34). இவர், புதுக்கோட்டை மாவட்டம் ஒடுக்கூர் அருகே உள்ள ஒரு தனியார் குவாரியில் தங்கி வேலை செய்து வந்தார்.

இந்நிலையில், 2019 டிசம்பரில் வாய் பேச முடியாத, மன வளர்ச்சிகுன்றிய 17 வயதுடைய சிறுவனை,டானிஷ் பட்டேல் காட்டுப் பகுதிக்குஅழைத்துச் சென்று, பாலியல்ரீதியாக துன்புறுத்தி உள்ளார்.

இதில், பாதிக்கப்பட்ட அச்சிறுவன் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, 18 நாட்களுக்குப் பிறகு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார், போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து டானிஷ் பட்டேலை கைது செய்தனர். பின்னர், அவர் மீது குண்டர் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த வழக்கு புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.சத்யா நேற்று பரபரப்பு தீர்ப்பளித்தார்.

அதில், குற்றஞ்சாட்டப்பட்ட டானிஷ் பட்டேலுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட 2019-ம்ஆண்டின் திருத்தப்பட்ட போக்ஸோசட்டத்தின்கீழ், பாலியல்ரீதியாக தொல்லை கொடுத்து காயம் ஏற்படுத்தியது, மனவளர்ச்சி குன்றிய சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது, பாலியல்ரீதியான தொல்லை கொடுத்து கொலை செய்தது ஆகிய குற்றங்களுக்கு 3 பிரிவுகளின்கீழ், தலா ஒரு தூக்கு தண்டனை வீதம் 3 தூக்கு தண்டனையும், கொலை செய்த குற்றத்துக்கு ஆயுள் தண்டனை, ரூ.20 ஆயிரம் அபராதமும், சிறுவனை தனியாக காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்ற குற்றத்துக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு ரூ.3 லட்சம் நிவாரணம் அளிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில், அரசு சார்பில் வழக்கறிஞர் அங்கவி வாதாடினார்.

காவலர்களுக்கு பாராட்டு

இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட கீரனூர் மகளிர் காவல் ஆய்வாளர் கவிதா, நீதிமன்ற காவலர் கலைவாணி ஆகியோரை பாராட்டிய புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன், “ஆவுடையார்கோவில் அருகே ஏம்பலில் சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு, கொலை செய்தவருக்கு அளிக்கப்பட்ட 3 தூக்கு தண்டனையைத் தொடர்ந்து, தற்போது இந்த வழக்கிலும் 3 தூக்கு தண்டனை அளிக்கப்பட்டுஉள்ளது.

இத்தகைய தீர்ப்பு நாடெங்கிலும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையாக இருக்கும்” என தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x