Published : 29 Jan 2021 03:13 AM
Last Updated : 29 Jan 2021 03:13 AM

சிதம்பரத்தில் மாணவர்கள் தொடர் போராட்டம் எதிரொலி அரசு மருத்துவக் கல்லூரி ஆனது ‘ராஜா முத்தையா’ தமிழக அரசு அரசாணை வெளியீடு

சென்னை

மாணவர்களின் தொடர் போராட்டம் காரணமாக, சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை அரசு மருத்துவக் கல்லூரியாக மாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வருகிறது. இக்கல்லூரி மாணவர்கள் தங்களிடம் அதிக கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறியும், அரசு மருத்துவக் கல்லூரிகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்த கல்விக் கட்டணத்தையே வசூலிக்க கோரியும் கடந்த 45 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாணவர்களுடன் தமிழக அரசு நடத்திய 3 கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியிலேயே முடிந்தன. இதைத் தொடர்ந்து, கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை விடப்பட்டது. ஆனாலும், மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், மாணவர்களின் தொடர் போராட்டம் காரணமாக, ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை அரசு மருத்துவக் கல்லூரியாக மாற்றம் செய்து தமிழக அரசு நேற்று அரசாணை பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக உயர்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளரின் கருத்துருவை ஏற்று, கீழ்க்காணும் நிபந்தனைகளுடன் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை அரசு மருத்துவக் கல்லூரியாக கருதும் வகையில் அந்த கல்லூரியை தமிழக சுகாதாரத் துறையிடம் ஒப்படைக்க அரசு ஆணையிடுகிறது.

அந்த கல்லூரியுடன் தொடர்புடைய ராணி மெய்யம்மை நர்ஸிங் கல்லூரி, ராஜா முத்தையா பல் மருத்துவக் கல்லூரி ஆகியவையும் சுகாதாரத் துறையிடம் ஒப்படைக்கப்படும். அந்த கல்லூரிகள் அமைந்துள்ள 113.21 ஏக்கர் நிலம் அரசிடம் ஒப்படைக்கப்படுவதன் மூலம், அதில் உள்ள அசையும் மற்றும் அசையா சொத்துகளும் சுகாதாரத் துறை வசம் ஒப்படைக்கப்படும். இதற்குரிய இழப்பீட்டுத் தொகை, அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கு வழங்கப்படும் கூடுதல் மானிய உதவிகளில் ஈடுசெய்யப்படும்.

நிதித் துறையின் ஒப்புதல் பெற்று, பணியாளர்கள் நிலவரம், இடங்களை நிரப்புவது மற்றும் கல்விக் கட்டணம், தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்துடன் இணைப்பு அங்கீகாரம் ஆகியவை தொடர்பாக சுகாதாரத் துறை மூலமாக தனி அரசாணை வெளியிடப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x