Published : 26 Jan 2021 03:17 AM
Last Updated : 26 Jan 2021 03:17 AM
‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படத்தில் ‘ஜாக்ஸன் துரை’ கதாபாத்திரத்தில் நடித்த பழம்பெரும் நடிகர் சி.ஆர்.பார்த்திபன் நேற்று காலமானார். அவருக்கு வயது 90.
கடந்த டிசம்பர் மாதம் இடதுகாலில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக மருத்துவ சிகிச்சையில் இருந்த சி.ஆர்.பார்த்திபன், வீட்டில்ஓய்வில் இருந்து வந்தார். திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு அவர் நேற்று காலை காலமானார்.
120-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர். எம்ஜிஆர் நடித்த ‘சங்கே முழங்கு’, ‘நவரத்தினம்’, ‘இதயக்கனி’ உள்ளிட்ட 10 படங்களிலும், சிவாஜியுடன் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’, ‘கப்பலோட்டிய தமிழன்’, ‘மோட்டார் சுந்தரம்பிள்ளை’, ‘ஆலயமணி’ உள்ளிட்ட 16 படங்களிலும் நடித்துள்ளார். ரஜினியுடன் ‘மூன்று முகம்’, ‘விடுதலை’ ஆகிய படங்களிலும், கமலுடன் ‘காக்கிச்சட்டை’, ‘தேன் சிந்துதே வானம்’உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். இவர் நடித்த கடைசி படம்1997-ம் ஆண்டில் வெளியான ‘சின்ன வாத்தியார்’ திரைப்படமாகும். பல படங்களில் காவல்துறை அதிகாரியாகவும், நீதிபதியாகவும் நடித்து தனி முத்திரை பதித்தவர்.
வேலூரை பூர்வீகமாகக் கொண்ட இவர், கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை மடிப்பாக்கத்தில் வசித்து வந்தார்.
சி.ஆர்.பார்த்திபனுக்கு வனஜா என்ற மனைவியும், ராம்மோகன், நாராயணன், கோபிநாதன், ரங்க ராமானுஜன் ஆகிய மகன்களும், ராஜலட்சுமி என்ற மகளும் உள்ளனர்.
நடிகர் சங்கம் இரங்கல்
நடிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினரான சி.ஆர்.பார்த்திபன் மறைவுக்கு நடிகர் சங்கம் சார்பில் ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டது. சி.ஆர்.பார்த்திபனின் உடலுக்கு நேற்று மாலை இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டு, ஆதம்பாக்கம் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT