Published : 20 Jan 2021 03:13 AM
Last Updated : 20 Jan 2021 03:13 AM

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் காணொலியில் விசாரிக்க கோரிவிசாரணை ஆணையத்தில் ரஜினி மனு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக ஒரு நபர் விசாரணை ஆணையத்தில் நடிகர் ரஜினி நேற்று ஆஜராகவில்லை. அவருக்கு பதிலாக அவரது வழக்கறிஞர் இளம்பாரதி ஆஜராகி, காணொலி மூலம் விசாரணை நடத்த கோரி மனு அளித்தார்.

தூத்துக்குடியில் 2018 மே 22-ம் தேதி நடைபெற்ற ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் வன்முறையில் முடிந்தது. அப்போது, போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது. இந்த ஒருநபர் ஆணையம் ஏற்கெனவே 23 கட்ட விசாரணையை முடித்துள்ளது. 586 பேர் சாட்சியம் அளித்துள்ளனர். 775 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

ஆணையத்தின் 24-ம் கட்ட விசாரணை தூத்துக்குடியில் நேற்று முன்தினம் தொடங்கியது. வரும் 22-ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது. இதில் ஆஜராக 56 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

சமூகவிரோதிகள்

`தூத்துக்குடியில் நடைபெற்ற வன்முறை சம்பவத்துக்கு சமூக விரோதிகளே காரணம்’ என ரஜினி கூறியிருந்தார். அதன்பேரில், நேற்று (ஜன.19) நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க, ரஜினிக்கு ஆணையம் சம்மன் அனுப்பியிருந்தது.

ஆனால், அவருக்கு பதிலாக அவரது வழக்கறிஞர் இளம்பாரதி ஆஜராகி மனு ஒன்றை தாக்கல் செய்தார். `காணொலி காட்சி மூலம் விசாரணை நடத்தினால், கேள்விகளுக்கு பதிலளிக்க ரஜினி தயாராக இருக்கிறார்’ எனஅந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுஉள்ளது.

ரஜினி தயார்

பின்னர், வழக்கறிஞர் இளம்பாரதி கூறியதாவது: கரோனா தொற்று காரணமாக அனைத்து நீதிமன்ற விசாரணைகளும் தற்போது காணொலியில்தான் நடைபெறுகின்றன. எனவே, காணொலிமூலமாகவோ, எழுத்துப்பூர்வமாகவோ பதிலளிக்க ரஜினிகாந்த் தயாராக உள்ளார்.

ஏற்கெனவே கடந்த மார்ச் மாதம் ஆணையம் எழுத்துபூர்வமாக கேட்ட கேள்விகளுக்கு, ரஜினியின் பதில்கள் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. மேலும் கேள்விகளை அளித்தால், அதற்கும் பதிலளிக்க அவர் தயாராக இருக்கிறார் என ஆணையத்தில் தெரிவித்துள்ளேன் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x