Published : 13 Jan 2021 03:14 AM
Last Updated : 13 Jan 2021 03:14 AM

பறவைக் காய்ச்சல் பரவுவதை தடுக்க 1,061 கண்காணிப்பு குழு உடுமலை ராதாகிருஷ்ணன் தகவல்

தமிழகத்தில் பறவைக் காய்ச்சல்பரவுவதைத் தடுக்க, கால்நடை உதவி மருத்துவர்கள், ஆய்வாளர்கள் கொண்ட 1,061 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

பறவைக் காய்ச்சலைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை குறித்த ஆய்வுக்கூட்டம் தலைமைச் செயலர் கே.சண்முகம் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில், தமிழக டிஜிபி ஜே.கே.திரிபாதி,கால்நடைத் துறை செயலர் கோபால், பல்வேறு துறைகளின் செயலர்கள், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தர் சி.பாலச்சந்திரன், கறிக்கோழி, முட்டைக்கோழி ஒருங்கிணைப்பு குழுக்களின் நிர்வாகிகள் மற்றும்தமிழ்நாடு கோழி பண்ணையாளர்கள் சங்க நிர்வாகிகளும் பங்கேற்றனர். இதில், தலைமைச் செயலர் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார்.

தொடர்ந்து, தமிழகத்தில் பறவைக் காய்ச்சலைத் தடுக்கஎடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து கால்நடைத் துறைஅமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:

பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுப்பது குறித்து கோழி பண்ணையாளர்களுக்கு விளக்கப்பட்டு, அவர்கள் தற்போது அதன்படி செயல்பட்டு வருகின்றனர்.

கேரள மாநில எல்லையோர மாவட்டங்களான நீலகிரி ,கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் தடுப்பு நடவடிக்கை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்டங்களில் 26 தற்காலிக சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

கேரளாவில் இருந்து வாகனங்களில் கோழி, வாத்துகள், கோழி தீவன மூலப்பொருட்கள் வந்தால், அவற்றை திருப்பி அனுப்பவும் கண்காணிப்பு குழுக்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இங்கிருந்து முட்டை, கறிக்கோழி கொண்டு செல்லும் வாகனங்கள் திரும்பி வரும்போது கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தப்பட்டு, தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அனைத்து மாவட்டங்களிலும் ஒரு கால்நடை உதவி மருத்துவர், ஆய்வாளர், உதவியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் கொண்ட 1,061 அதிவிரைவு செயல்பாட்டுக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கட்டுப்பாட்டு அறை

24 மணி நேரமும் செயல்படும்கட்டுப்பாட்டு அறை கோவை கால்நடை பன்முக மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு அறையை 0422-2397614, 9445032504 என்ற எண்களில் தொடர்பு கொண்டு கோழிகளுக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்து தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x