பால் வேன் வாடகை தொகையை வழங்க ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஆவின் மேலாளர் கைது

ஆவின் மேலாளர் ரவி
ஆவின் மேலாளர் ரவி
Updated on
1 min read

திருவண்ணாமலை மாவட்டம் சொரக்கொளுத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகய்யன் (50). இவர், வேலூர் ஆவின் நிறுவனத்தில் இருந்து திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள குளிரூட்டும் மையத்துக்கு பால் எடுத்துச்செல்லும் வேலை செய்து வந்தார். இதற்காக இவருக்கு, ஒரு லிட்டருக்கு 40 பைசா வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், வேலூர் ஆவின் நிறுவனம் சார்பில் முருகய்யனுக்கு வேன் வாடகை பணம் ரூ.1.81 லட்சம் கொடுக்க வேண்டியிருந்தது. இதற்கான காசோலை கடந்த வாரம் தயாரானது.

ஆவின் நிறுவனத்தின் அலுவலக மேலாளராக பணியாற்றி வரும் வேலூர் அலமேலுமங்காபுரத்தைச் சேர்ந்த ரவி (54) என்பவர், ரூ.1.81 லட்சத்துக்கான காசோலையை வழங்க ரூ.50 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது.

லஞ்சம் கொடுக்க விரும்பாத முருகய்யன், வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் புகார் அளித்தார். அவர்களது அறிவுறுத்தலின் பேரில், ரசாயனம் தடவிய ரூ.50 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களுடன் ஆவின் நிறுவனத்துக்கு நேற்று வந்த முருகய்யன், மேலாளர் ரவியிடம் அன்த பணத்தை வழங்கினார்.

அப்போது, அங்கு மறைந்திருந்த வேலூர் லஞ்ச ஒழிப்புப் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் ஹேமசித்ரா, ஆய்வாளர்கள் விஜய் மற்றும் விஜயலட்சுமி ஆகியோர் அடங்கிய குழுவினர் ஆவின் மேலாளர் ரவியை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in