Published : 17 Dec 2020 03:17 AM
Last Updated : 17 Dec 2020 03:17 AM

வேலூரில் உள்ள டாஸ்மாக் மேலாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸார் சோதனை

வேலூர்

சென்னை டாஸ்மாக் மேலாளர் முருகன் மீது லஞ்ச ஒழிப்புப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்ததை தொடர்ந்து, வேலூரில் உள்ள அவரது வீட்டில் வேலூர் லஞ்ச ஒழிப்புப்பிரிவு போலீஸார் நேற்று சோதனை நடத்தினர்.

சென்னை வேளச்சேரி, அயனாவரம், எழும்பூர், அமைந்தங்கரை உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வரும் டாஸ்மாக் ‘எலைட்’ கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை காட்டிலும் மதுபாட்டில்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக, சென்னை லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸாருக்கு புகார் சென்றது.

அதன்பேரில், வேளச்சேரியில் உள்ள பீனிக்ஸ்மால், அல்சாமால், ஸ்கைவாக் உள்ளிட்ட மால்களிலும், அயனாவரம் பகுதியில் உள்ள எலைட் கடைகளில் சென்னை லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் நேற்று முன்தினம் இரவு 10 மணி முதல் விடிய, விடிய சோதனை நடத்தினர். இதில், கணக்கில் வராத பணம், முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

டாஸ்மாக் எலைட் கடைகளில் மதுபான பாட்டில்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதின் பின்னணியில் சென்னை டாஸ்மாக் மேலாளர் முருகனுக்கு முக்கிய தொடர்பு இருப்பதும் விசாரணையில் தெரியவந்ததால் முருகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து, முருகனின் வீடு மற்றும் உறவினர் வீடுகளில் சோதனை நடத்த லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் முடிவு செய்தனர். அதன்பேரில், வேலூர் தொரப்பாடி-பாகாயம் சாலை, ஆப்கா பகுதியில் உள்ள முருகன் வீட்டுக்கு நேற்று வேலூர் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் சென்றனர்.

லஞ்ச ஒழிப்புப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் ஹேமசித்ரா தலைமையில், ஆய்வாளர் விஜய் மற்றும் 5-க்கும் மேற்பட்ட போலீஸார் முருகன் வீட்டில் 5 மணி நேரம் சோதனை நடத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x