Published : 26 Nov 2020 03:17 AM
Last Updated : 26 Nov 2020 03:17 AM

ஆஸ்திரேலியாவுக்கு படகில் கடத்த முயன்ற ரூ.500 கோடி மதிப்புள்ள ஹெராயின் தூத்துக்குடி அருகே கடலில் பறிமுதல் இலங்கையைச் சேர்ந்த 6 பேர் கைது; தீவிர விசாரணை

பறிமுதல் செய்யப்பட்ட ஹெராயின் உள்ளிட்ட போதைப் பொருட்கள்.

தூத்துக்குடி

தூத்துக்குடி அருகே இலங்கைக்கு சொந்தமான படகில் கடத்தப்பட்ட 100 கிலோ எடையுள்ள ஹெராயின் உள்ளிட்ட போதைப் பொருட்கள் மற்றும் 5 துப்பாக்கிகளை இந்திய கடலோர காவல் படையினர் நேற்று பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடியில் உள்ள இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான ‘வைபவ்’ என்ற ரோந்துக் கப்பலில் கடலோர காவல் படையினர் நேற்று மன்னார் வளைகுடா கடல் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, தூத்துக்குடிக்கு தெற்கே சர்வதேச கடல் எல்லையையொட்டிய இந்திய கடல் பகுதிக்குள் இலங்கையைச் சேர்ந்த படகு ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்தப் படகை கடலோர காவல் படையினர் சுற்றிவளைத்து சோதனை நடத்தினர்.

படகில் காலியான டீசல் டேங்க் ஒன்றில் போதைப் பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்து தெரியவந்தது. 99 பாக்கெட்டுகளில் 100 கிலோ எடையுள்ள ஹெராயின் மற்றும் 20 சிறிய பெட்டிகளில் சிந்தடிக் போதைப் பொருட்கள் ஆகியவை இருந்தன. மேலும், 9 எம்எம் அளவுள்ள 5 பிஸ்டல் துப்பாக்கிகளும், ‘துரயா’ வகையைச் சேர்ந்த சாட்டிலைட் போன் ஒன்றும் இருந்தன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.500 கோடி வரை இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

படகுடன் போதைப் பொருட்கள், துப்பாக்கிகள் உள்ளிட்ட அனைத்தையும் பறிமுதல் செய்த கடலோர காவல் படையினர், அந்த படகில் இருந்த இலங்கையைச் சேர்ந்த 6 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், படகில் இருந்த போதைப் பொருட்கள் பாகிஸ்தானில் இருந்து கடத்தி வரப்பட்டது என்பது தெரியவந்தது.

பாகிஸ்தானின் கராச்சி பகுதியில் இருந்து பாய்மரப் படகு மூலம் கடத்தி வரப்பட்ட போதைப் பொருட்கள், நடுக்கடலில் வைத்து இலங்கை படகுக்கு மாற்றப்பட்டுள்ளன. கடந்த 17-ம் தேதி கராச்சியில் இருந்து போதைப் பொருட்களுடன் புறப்பட்ட படகு கடல் சீற்றம் காரணமாக 9 நாட்களுக்குப் பிறகு தூத்துக்குடி கடல் பகுதிக்கு நேற்று வந்துள்ளது.

இந்த போதைப் பொருட்கள் மேற்கத்திய நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு கடத்திச் செல்வதற்காக கொண்டுவரப்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட 6 பேர், பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்களுடன் இந்திய கடலோர காவல் படையினர் தூத்துக்குடிக்கு வருகின்றனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் மத்திய, மாநில உளவுப் பிரிவு போலீஸார் விசாரணை நடத்தவுள்ளனர். அதன் பிறகே முழு விவரங்களும், பின்னணியில் உள்ள தகவல்களும் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x