Published : 21 Nov 2020 03:16 AM
Last Updated : 21 Nov 2020 03:16 AM
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டு அதிமுக அமைச்சர்களே பயப்படாதபோது, திமுக ஏன் பயப்பட வேண்டும் என்று திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சென்னை வருகையைப் பார்த்து எதிர்க்கட்சிகள் பயப்படுவதாக பாஜக தலைவர்கள் பேசி வருவது வேடிக்கையாக உள்ளது. அமித்ஷாவை பார்த்து அதிமுக அமைச்சர்களே பயப்படாதபோது, திமுக ஏன் பயப்பட வேண்டும்?
எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது திருச்செந்தூர் முருகன் கோயில் வேல் காணாமல் போனது. அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கருணாநிதி முருகனின் வேலை கண்டுபிடிக்க வலியுறுத்தி 110 கி.மீ. நடைபயணம் சென்றார். தமிழகத்தில் பாஜகவை வளர்க்க வேல் யாத்திரை செல்கிறார்கள். வேல் யாத்திரைக்கு தடை என்று சொல்லி அதற்கு தமிழக அரசு அனுமதிக்கிறது. மத்திய பாஜக அரசுக்கு பயந்துகொண்டு அதிமுக அரசு இப்படிச் செய்கிறது.
திமுக – காங்கிரஸ் உறவுநன்றாக இருக்கிறது. மற்றவர்கள் நினைப்பது போல எந்தக் கலகத்தையும் எங்களுக்குள் ஏற்படுத்திவிட முடியாது. தொகுதிகள் குறித்து காங். தலைமையுடன் ஆலோசித்து ஸ்டாலின் முடிவெடுப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT