Published : 30 Oct 2020 03:13 AM
Last Updated : 30 Oct 2020 03:13 AM

தேவர் குரு பூஜை விழாவில் பங்கேற்க முதல்வர் பழனிசாமி இன்று பசும்பொன் வருகை: பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள்

மதுரை விமான நிலையத்தில் முதல்வரை வரவேற்ற வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார். உடன் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ.

ராமநாதபுரம்

தேவர் குரு பூஜை விழாவில் பங்கேற்பதற்காக முதல்வர் பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் இன்று பசும்பொன் வருகின்றனர். இதையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 8,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் 113-வது ஜெயந்தி விழா, 58-வது குரு பூஜை விழா இன்று நடைபெறுகிறது. இது அரசு விழாவாகவும் கொண்டாடப்படுகிறது.

அரசு சார்பில் காலை 9 மணிக்கு முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள், முக்கியப் பிரமுகர்கள் நினைவிடத்தில் உள்ள தேவர் சிலைக்கு மரியாதை செலுத்துகின்றனர்.

மேலும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன், அமமுக பொதுச் செயலாளர் தினகரன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், தேமுதிக நிர்வாகி எல்.கே.சுதீஷ், கருணாஸ் எம்எல்ஏ ஆகியோரும், சமுதாய அமைப்பின் தலைவர்களும் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகின்றனர். இதற்காக மாவட்ட நிர்வாகம் நேரம் ஒதுக்கி உள்ளது. அந்த நேரத்தில் அஞ்சலி செலுத்த வேண்ண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

தேவர் குரு பூஜை விழாவை முன்னிட்டு பசும்பொன் மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 8,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 9 வெடிகுண்டு துப்பறியும் குழுவினர், 9 துப்பறியும் மோப்ப நாய் படை குழுவினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பசும்பொன் மற்றும் கமுதியில் 200 இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மாவட்டத்தில் 151 பகுதிகள் தடை செய்யப்பட்ட வழித் தடங்களாகவும், 131 இடங்கள் பதற்றமான பகுதிகளாகவும் கண்டறியப்பட்டு கண்காணிக்கப்படுகின்றன.

மேலும் ஆளில்லாத விமானங்கள் பறக்கவிடப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. அதற்கான ஒத்திகை பசும்பொன் காவல் கட்டுப்பாட்டு அறை அருகே வேலூர் டிஐஜி காமினி, ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் இ.கார்த்திக் ஆகியோர் முன்னிலையில் நேற்று நடைபெற்றது.

8,000 போலீஸார்

அப்போது காவல் கண்காணிப்பாளர் இ.கார்த்திக் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பசும்பொன்னில் சட்டம்-ஒழுங்கு சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் தலைமையில் தென்மண்டல ஐ.ஜி. முருகன், வடக்கு மண்டல ஐ.ஜி. பொன்.நாகராஜன், டிஐஜிக்கள் காமினி (வேலூர்), என்.எம்.மயில்வாகனன் (ராமநாதபுரம்) மற்றும் 13 எஸ்.பி.க்கள், 22 ஏடிஎஸ்பிகள், 80 டிஎஸ்பிக்கள் என 8,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆளில்லா விமானம் மூலமும் கண்காணிக்கப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள 100-க்கும் மேற்பட்ட சமுதாயத் தலைவர்களின் சிலைகளுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

ஒரே விமானத்தில் பயணம்

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற் முதல்வர் பழனிசாமியும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் ஒரே விமானத்தில் நேற்று மதுரை புறப்பட்டுச் சென்றனர்.

இருவரும் சென்னையிலிருந்து நேற்று மாலை 5.15 மணிக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் மூலம் மதுரை புறப்பட்டுச் சென்றனர். இதற்காக ஸ்டாலின் மாலை 4.15 மணிக்கு சென்னை உள்நாட்டு விமானநிலையம் முதல் நுழைவு வாயில் வழியாக விமானத்துக்கு சென்றார். முதல்வர் பழனிசாமி மாலை 4.45 மணிக்கு சென்னை பழைய விமானநிலையம் 6-வது நுழைவு வாயில் வழியாக காரில் உள்ளே சென்றார்.

வேறுவேறு வழிகளில் வந்தாலும் முதல்வரும், திமுக தலைவரும் ஒரே விமானத்தில் பயணித்தனர். முதல்வர் 1ஏ இருக்கையிலும், ஸ்டாலின் 1எப் இருக்கையிலும் அமர்ந்து பயணித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x