Published : 09 Nov 2023 05:15 AM
Last Updated : 09 Nov 2023 05:15 AM

நாத்திக கொள்கையையும் அரசியலமைப்பு சட்டம் பாதுகாக்கிறது: நீதிமன்றத்தில் உதயநிதி தரப்பு வழக்கறிஞர் வாதம்

சென்னை: சனாதன தர்மத்துக்கு எதிராக பேசியதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுக எம்பி ஆ.ராசா மற்றும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் சேகர்பாபு ஆகியோரை பதவியில் இருந்து நீக்கக்கோரி இந்து முன்னணி நிர்வாகிகள் 3 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் கோ-வாரண்டோ மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்குகள் மீதான விசாரணை நீதிபதி அனிதா சுமந்த் முன்பாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அப்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தரப்பில் மூத்த வழக்கறிஞரும், திமுக எம்பியுமான பி.வில்சன் ஆஜராகி வாதிட்டதாவது:

ஒருவரை அமைச்சராக நியமிப்பதும், அவரை பதவியில் இருந்து நீக்குவதும் முதல்வரின் அதிகாரத்துக்கு உட்பட்டது. அந்த அதிகார எல்லை தடை செய்யப்பட்ட பகுதி. இந்நிலையில் அமைச்சர் தனது பதவிப்பிரமாண உறுதிமொழியை மீறிவிட்டார் எனக்கூறி அதில் தலையிட்டு உயர் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க முடியாது. அமைச்சர் ஒருவர் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை தெரிவித்திருந்தாலும் அதை எதிர்த்து தனிநபர்கள் வழக்கு தொடர முடியாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 25 மத நம்பிக்கையை மட்டும் பாதுகாக்கவில்லை. மாறாக நாத்திக கொள்கைகளையும் பாதுகாக்கிறது. அதுமட்டுமல்ல, ஏன் நாத்திகத்தை ஏற்கிறோம் என்பது குறித்து கருத்து தெரிவிக்கவும் உரிமை வழங்கியுள்ளது. அதனால், சனாதனத்துக்கு எதிராக பேசியதாக வழக்கே தொடர முடியாது.

கருத்துரிமையையும் பாதுகாப்பது உயர் நீதிமன்றத்தின் கடமை. சனாதன தர்மத்தில் ஏற்றத்தாழ்வு உள்ளது என்றும், தீண்டாமை உள்ளது என்றும் அவற்றையெல்லாம் ஒழிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதியான சேஷசாயி ஏற்கெனவே தீர்ப்பு ஒன்றில் கூறியுள்ளார்.

திருமணத்துக்கு முன்பான உறவு குறித்து நடிகை குஷ்பு தெரிவித்த கருத்துகளை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவர் தெரிவித்த கருத்து பிடிக்கவில்லை என்றால் அவரது கருத்து தவறு என பொதுவெளியில் பேசலாமேயன்றி, அதற்காக குற்ற வழக்கு ஏன் தொடர வேண்டும் என கேள்வி எழுப்பியது.

அதேபோல மாதொருபாகன் வழக்கிலும் பிடிக்கவில்லை என்றால் அந்த புத்தகத்தை வாங்காதீர்கள், படிக்காதீர்கள், கேட்காதீர்கள் என்றும், அதற்காக ஒருவரது கருத்துரிமையை தடுக்க முடியாது என இந்த நீதிமன்றமும் தீர்ப்பளித்தது.

பேச்சுரிமை என்பது ஒருவரின் இயற்கையான, அடிப்படை மனித உரிமை. அதை பாதுகாக்க வேண்டும். ஒருவரது பேச்சுரிமையை கட்டுப்படுத்த அரசியலமைப்பு சட்டத்தில் 8 காரணங்கள் கூறப்பட்டுள்ளன. அந்த 8 காரணங்களில் மனுதாரர் இந்த வழக்கில் தெரிவித்துள்ள காரணம் ஒன்று கூட இல்லை. இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கும். இதில் அமைச்சரையும் பதில் மனு தாக்கல் செய்ய வைத்துள்ளனர்.

சனாதன ஒழிப்பு மாநாடு ஒரு கூட்டரங்கில் காலை முதல் இரவு வரை நடந்துள்ளது. அதில் பேசப்பட்ட கருத்துக்கள் பிடிக்கவில்லை என்றால் அதை ஏன் கேட்க வேண்டும். அதைவிடுத்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து ஒப்பாரி வைக்கக்கூடாது. எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு வாதிட்டார். அதையடுத்து இந்த வழக்கை இன்றைக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x