Published : 15 Aug 2021 03:24 AM
Last Updated : 15 Aug 2021 03:24 AM

ஒலிம்பிக் வீராங்கனைக்குக் காத்திருந்த அதிர்ச்சி :

நடந்து முடிந்த டோக்கியோ ஒலிம்பிக் 2020 போட்டியில் இந்தியாவின் சார்பில் 4X400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் ரிசர்வ் போட்டியாளராகப் பங்கேற்கச் சென்றார் தடகள வீராங்கனை தனலட்சுமி சேகர். போட்டிகள் முடிந்து நாடு திரும்பியவுடன் அவருக்குப் பேரதிர்ச்சி காத்திருந்தது. திருச்சிராப்பள்ளிக்கு அருகில் உள்ள குண்டூர் என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் தனலட்சுமி. சக வீராங்கனை சுபா வெங்கடேசனுடன் ஆகஸ்ட் 7 அன்று திருச்சிராப்பள்ளி விமான நிலையத்தை வந்தடைந்தபோது இருவருக்கும் பொதுமக்களின் ஆரவார வரவேற்பு கிடைத்தது. அந்த நேரத்தில்தான் தனலட்சுமி தனக்குப் பெரும் துணையாக இருந்த அக்காவின் மரணச் செய்தியைத் தெரிந்துகொண்டார். அங்கேயே அமர்ந்து கண்களை மூடிக்கொண்டு அவர் அழுத ஒளிப்படம் ஊடகங்களில் வெளியானது. ஜூன் 12 அன்று தனலட்சுமி டோக்கியோவில் இருந்தபோதே அவருடைய அக்கா உடல்நலக் கோளாறு காரணமாக மரணமடைந்தார். ஆனால், தன்னுடைய இளைய மகள் ஒலிம்பிக்கில் கவனத்தைத் தவறவிட்டுவிடக் கூடாது என்பதற்காக மூத்த மகள் மரணமடைந்த செய்தி தனலட்சுமியின் காதுகளுக்குச் சென்று சேராத வண்ணம் தாய் உஷா பார்த்துக்கொண்டார். தந்தை சேகர். தனலட்சுமி சிறுமியாக இருந்தபோதே இறந்துவிட்டார்.

பொருளாதாரரீதியாகப் பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த தனலட்சுமி ‘குண்டூர் எக்ஸ்பிரஸ்’ என்று அறியப்படும் அளவுக்கு அதிவிரைவாக ஓடக்கூடியவர். தேசிய அளவிலான போட்டிகளில் பல பதக்கங்களை வென்றிருக்கிறார். ஒலிம்பிக்குக்குத் தகுதி பெறுவதற்கான போட்டியில் 23.26 நொடிகளில் 200 மீட்டர் தொலைவு ஓடி பி.டி.உஷாவின் 23 ஆண்டு கால சாதனையை முறியடித்தார். 100 மீட்டர் போட்டியில் 11.39 நொடிகளில் ஓடி டுட்டி சந்தைத் தோற்கடித்துத் தங்கப் பதக்கம் வென்றார். ஒலிம்பிக்கில் பங்கேற்றுத் திரும்பிய பெருமிதத் தருணத்தின் மகிழ்ச்சியைக் கொண்டாட முடியாமல் உடன்பிறப்பை இழந்த வலியால் தவித்தார் தனலட்சுமி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x