Last Updated : 03 Dec, 2020 03:14 AM

 

Published : 03 Dec 2020 03:14 AM
Last Updated : 03 Dec 2020 03:14 AM

ரதியின் சிலையிலிருந்து தெரியும் மன்மதன்

அனங்கன், அங்கஜன், அந்தகன், அருங்கன், ஆனந்தன், வசந்தன், மன்ராயன், மனோசித்தன், மனோகரன், மதனன், மாறன், சேகரன், சுந்தரன், வில்லாலன், புஷ்பவனன், ராகவிந்தன், ரதிமணாளன், கந்தர்வன், காமதேவன் என்று பல பெயர்களில் அழைக்கப்படுகிறார் காதல் கடவுளான மன்மதன்.

இவர் திருமாலின் மானச புத்திரர், பிரத்யூமனன் என்று பெயர். தென்றல் இவரது தேராகும், வாகனம் பச்சைக் கிளி, வாள், தாழம்பூ மடல், கொடி-குயில். இவரது கையில் கரும்பு வில் இருக்கும், வில்லின் நாண் தேனீக்களால் (வண்டுகளால்) ஆனது. தாமரை, நீலோற்பலம், அசோகு, முல்லை, மாம்பூக்களால் ஆன அஸ்திரங்களை வைத்திருப்பவர். இவற்றுக்குப் பஞ்ச பாணங்கள் என்று பெயர். இவருக்கு உகந்த காலம் வசந்த காலம். சிவபெருமானின் நெற்றிக் கண்ணால் எரிக்கப்பட்டு உருவத்தை இழந்தவர். ரதி தேவியின் கண்களுக்கு மட்டுமே தெரிபவர். அதனால்தானோ என்னவோ கோயில்களில் ரதிதேவியின் சிலைக்கு எதிரில் மன்மதனின் சிலையை வடித்து வைக்கும் மரபு ஏற்பட்டது போலும். இவர் கிரேக்கத்தில் ஈரோஸ் (Eros) என்றும் ரோமானியர்களால் கியூபிட் (Cupid) என்றும் அழைக்கப்படுகிறார்.

இத்தனைச் சிறப்புகளை உடைய இந்த மன்மதனின் சிற்பம் சற்று வித்தியாசமாக ஆறு கரங்களுடன் காட்சிதருகிறது. வலது கரங்கள் இரண்டிலும் புஷ்ப பாணங்கள் பிரயோகிப்பதற்கு ஏற்றாற்போல் தயாராக உள்ள பாவனையில் அமைக்கப்பட்டுள்ளது. இன்னொரு கரத்தில் அங்குசம் ஏந்தியபடி உள்ளார். இடதுகரம் ஒன்றில் கரும்பு வில்லும், மற்ற கரங்களில் பாசம், மழுவும் தாங்கியபடி காட்சி தருகிறார். இவரது தலைக் கிரீடம் நீண்ட வாக்கில் சிறப்பான வேலைப்பாடுகளுடன் உள்ளது. கிரீடத்தின் பின்புறம் தாழம்பூ மடல்களாலும் பூக்களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இரண்டு காதுகளின் மேல் அல்லி மலரின் மொட்டு போன்றும், கர்ண துவாரங்களில் தாமரை மொட்டு போன்ற குண்டலங்களும் அலங்கரித்திருக்கின்றன...

கிரீடத்தின் மேல் பகுதியில் முழுவதும் மலர்ந்த தாமரை மலர், குடை போன்ற அமைப்பில் உள்ளது. கரும்பு வில்லின் நாண், வண்டுகளைப் போன்று ஒன்றின் பின் ஒன்றாக வடிவமைத்திருப்பது தனி சிறப்பு. பரந்த மார்பில் உள்ள அணிகலன்களும், இடையில் உள்ள மலர்களால் ஆன ஆடைகளும் மிகக் கவனமாகவும் நேர்த்தியுடனுடனும் வடிவமைக்கப் பட்டுள்ளன. வலது காலைச் சற்று முன்வைத்து மலர்க்கணையைப் பிரயோகம்செய்யத் தயார் நிலையில் காணப்படுகிறார்.

வலது காலடியில் தாமரைப்பூவும், வாகனமாகிய கிளியும் காட்டப்பட்டுள்ளது அழகு. ஒவ்வொரு பகுதியையும் பார்த்துப் பார்த்துச் செதுக்கியுள்ள சிற்பியின் கற்பனைத் திறனையும், கலைத் திறனையும் போற்றிப் பாராட்ட வார்த்தைகளே இல்லை. இந்தச் சிற்பம், கிருஷ்ண தேவராயரின் இளைய சகோதரர் அச்சுத தேவராயரால் பதினாறாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட தாடிக்கொம்பு சௌந்தரராஜ பொருமாள் கோயிலில் உள்ளது.

சேலம், தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலில் உள்ள ரதிதேவியின் சிலையருகே இருந்து பார்த்தால் மன்மதனின் சிலையும், மன்மதனின் சிலையருகே இருந்து பார்த்தால் ரதிதேவியின் சிலையும் தெரியும் வண்ணம் உள்ளது. மற்ற இடங்களில் இருந்து பார்த்தால் மன்மதனின் சிலை புலப்படாது என்றும் சொல்லப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x