

வட கிழக்குப் பருவமழை தாமதத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கக்கோரி திண்டுக்கல் ஆட்சியர் மு.விஜயலட்சுமியிடம் ஒட்டன்சத்திரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. அர.சக்கரபாணி மனு அளித்தார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஒட்டன்சத்திரம் பகுதியில் மானாவாரியாக 36 ஆயிரம் ஏக்கரில் மக்காச்சோளம், வெள்ளைசோளம், பருத்தி, நிலக்கடலை உள்ளிட்ட பயிர்களைச் சாகுபடி செய்திருந்தனர். வடகிழக்குப் பருவமழை தாமதத்தால் இவை முற்றிலும் காய்ந்து விட்டன. இதனால் விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட விவசாயப் பரப்பு குறித்து வேளாண் மற்றும் வருவாய்த் துறைகள் மூலம் கணக்கெடுத்து மாநிலப் பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து விவசாயிகளுக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. பழநி அருகே சரவணம் பட்டியில் விளைநிலங்கள் உள்ள பகுதியில் புதிதாகக் கல்குவாரி அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
குவாரி அமைக்கப்பட்டால் விவசாயம், குடிநீர், குடியிருப்புகள் பாதிக்கப்படும். எனவே கல்குவாரி அமைக்க வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்றும் ஆட்சியரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.