Published : 07 Feb 2021 03:14 AM
Last Updated : 07 Feb 2021 03:14 AM

வேளாண் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி சிவகங்கை, பரமக்குடியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திய அரசின் வேளாண் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி புதுடெல்லியில் 60 நாட்களுக்கும் மேலாக வடமாநில விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின் றனர். அவர்களுக்கு ஆதரவாக நேற்று அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

சிவகங்கை அரண்மனைவாசலில் விவ சாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்திய கம்யூனிஸ்ட் முன்னாள் எம்எல்ஏ குணசேகரன் தலைமை வகித்தார்.

விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஆறுமுகம், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் தண்டியப்பன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் முத்துராமலிங்க பூபதி, திருநாவுக்கரசு, அய்யம்பாண்டி, இந்திய கம்யூ. மாவட்டச் செயலாளர் கண்ணகி, விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் விசுவநாதன், கொல்லங்குடி ஊராட்சித் தலைவர் மெய்ஞானமூர்த்தி உள் ளிட்டோர் பங்கேற்றனர்.

இதேபோல், புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி பரமக்குடியில் மதுரை - ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் "சக்கா ஜாம்" போராட்டம் நடத்திய 50 விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.

புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறவும், குறைந்தபட்ச ஆதரவு விலை முறையை உறுதி செய்யவும் கோரி விவசாயிகள் கடந்த நவம்பர் 26-ம் தேதி முதல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒருபகுதியாக நேற்று நண்பகல் முதல் பிற்பகல் 3 மணி வரை தேசிய நெடுஞ்சாலைகளில் சக்கா ஜாம் என்ற சாலை மறியல் நடத்துவதாக அறிவித்தனர். இதனடிப்படையில் பரமக்குடியில் மதுரை-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் மதுரை - ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்ட விவசாயிகளை காவல்துறையினர் கைதுசெய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x