Published : 30 Oct 2021 03:13 AM
Last Updated : 30 Oct 2021 03:13 AM

வணிகவரித் துறை மறுகட்டமைப்பு - புதிதாக 7 நிர்வாக கோட்டங்கள் உருவாக்கம் :

வணிகவரித் துறையை மறு கட்டமைப்பு செய்யும் வகையில், திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், திருவாரூர், ஓசூர், திருப்பூர்மற்றும் விருதுநகர் ஆகிய 7 இடங்களில் புதிதாக வணிகவரி நிர்வாகக் கோட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:

சட்டப்பேரவையில் கடந்த செப்.6-ம் தேதி வணிகவரித் துறை மைச்சர் வெளியிட்ட அறிவிப்பில், ‘‘வணிகவரித் துறையில் தற்போது 12 நிர்வாகக் கோட்டங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த துறையை மறுகட்டமைப்பு செய்யும் நடவடிக்கையின் ஓர் அங்கமாக, திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிடத்திலும், செங்கல்பட்டு, கடலூர், திருவாரூர், ஓசூர், திருப்பூர் மற்றும் விருதுநகர் ஆகிய 6 இடங்களிலும் சேர்த்து மொத்தம் 7 புதிய வணிகவரி நிர்வாகக் கோட்டங்கள் உருவாக்கப்படும். இதன் மூலம் கூடுதலான மனித வளங்களை, களப்பணிக்கு அளிக்கஇயலும்’’ என்று அறிவித்திருந்தார்.இதன்படி, புதிய கோட்டங்கள் உருவாக்கப்பட்டு, அதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் கோட்டத்தில் தற்போதைய சென்னை வடக்கு, தெற்கு கோட்டங்களில் இருந்த பகுதிகள் அடங்கியுள்ளன. புழல் பகுதியில் இதற்கான அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை கிழக்கு, தெற்கு கோட்டங்களில் இருந்த பகுதிகள் பிரிக்கப்பட்டு செங்கல்பட்டு கோட்டம் உருவக்கப்பட்டுள்ளது. இதற்கான அலுவலகம் தாம்பரத்தில் செயல்படும்.

கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி பகுதிகள் கடலூர் கோட்டத்திலும், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் தஞ்சாவூர் பகுதிகள் திருவாரூர் கோட்டத்திலும், கிருஷ்ணகிரி, தருமபுரி பகுதிகள் ஒசூர் கோட்டத்திலும், திருப்பூர் பகுதி திருப்பூர் கோட்டத்திலும், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் பகுதிகள் விருதுநகர்கோட்டத்திலும் இணைக்கப்பட்டுஉள்ளன.

இவ்வாறு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x