Published : 16 Oct 2021 06:12 AM
Last Updated : 16 Oct 2021 06:12 AM

ஈரோட்டில் ஹெல்மெட் அணியாதவர்களுக்கு அபராதம் போலீஸார் கண்காணிப்பு :

ஈரோடு நகரில் ஹெல்மெட் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கும் பணியை காவல்துறை தீவிரப்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் விபத்துகளைக் குறைக்கும் வகையில் போலீஸார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். விபத்துகளில் உயிரிழப்புகளைத் தடுக்க காரில் பயணிப்பவர்கள் சீட் பெல்ட் அணிய வேண்டும், இரு சக்கர வாகனத்தில் பயணிப்போர் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும் என போலீஸார் உத்தரவிட்டுள்ளனர்.

ஈரோடு மாநகர் பகுதியில் கடந்த சில நாட்களாக ஹெல்மெட் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம் விதிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. ஈரோடு மாநகர் பகுதியில் தினமும் 400 பேருக்கு தலா ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:

கரோனா ஊரடங்கு தளர்விற்குப் பிறகு வாகனப் போக்குவரத்து அதிகரித்துள்ளது. இரு சக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் பயணிப்பவர்கள், விபத்தில் சிக்கினால் உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது. இதனைத் தடுக்க, ஹெல்மெட் அணியாதவர்களுக்கு தலா ரூ.100 வீதம் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

ஹெல்மெட் அணிவதைக் கட்டாயப்படுத்தும் வகையில், வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்ற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. ஹெல்மெட் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். அதன்பின்னர் விதிமுறைகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x