Published : 16 Oct 2021 06:14 AM
Last Updated : 16 Oct 2021 06:14 AM

கோயில்களில் குடமுழுக்கு நடத்துவது குறித்து - முதல்வர் விரைவில் நல்ல முடிவை அறிவிப்பார் : அமைச்சர் சேகர்பாபு கருத்து

கோயில்களில் குடமுழுக்கு நடத்துவது குறித்து முதல்வர் ஆய்வு நடத்தி உள்ளார். இதுதொடர்பாக வெகு விரைவில் நல்ல முடிவை அறிவிப்பார் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் அமைச்சர் சேகர்பாபு நேற்று காலை சுவாமி தரிசனம் செய்தார். கோயிலில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகள் தொடர்பாக ஆய்வும் நடத்தினார். அப்போது செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது:

அனைத்து நாட்களிலும் கோயில்கள் திறக்கப்படும் என அறிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மக்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். கோயில்களில் கரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது. கோயில்களில் பொதுமக்கள் கூட்டமின்றி சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். கோயில்களில் குடமுழுக்கு நடத்துவது குறித்து ஏற்கெனவே முதல்வர் ஆய்வு நடத்தி உள்ளார். இதுதொடர்பாக வெகு விரைவில் நல்ல முடிவை அறிவிப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.

‘‘பாஜக கொடுத்த அழுத்தம்தான் கோயில்களை திறக்க காரணம் என அக்கட்சியின் தலைவர்கள் கூறி வருகின்றனரே’’ என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர், ‘‘கட்டுப்பாடு இல்லாத ஆட்சிக்குதான் அழுத்தம் தேவைப்படும். தற்போதைய ஆட்சி அழுத்தத்துக்கு அடிபணியும் ஆட்சி கிடையாது. கோயில்களை வைத்து அரசியல் செய்யக் கூடாது. மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப கோயில்கள் திறக்கப்பட்டுள்ளன. அவர்கள் கூறுவது, கனிந்த கனியை தடியால் அடித்து விழவைப்பது போல் இருக்கிறது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x