பயிர்க் காப்பீடு இழப்பீடு வழங்கக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் :

பயிர்க் காப்பீடு இழப்பீடு வழங்கக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் :

Published on

தஞ்சாவூர்: 2020-21-ம் ஆண்டு பயிர்க் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்கக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, கட்சியின் ஒன்றியச் செயலாளர் ரா.ராமச்சந்திரன் தலைமை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில், கடந்த ஆண்டு பருவம் தவறி பெய்த மழையால் ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்புக்கு அரசு அறிவித்த இழப்பீட்டுத் தொகையை பூதலூர் வட்டத்தில் விடுபட்ட 286 பயனாளிகளுக்கும் உடனடியாக வழங்க வேண்டும்.

கடந்த 2020-21-ல் பயிர்க் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டதால், இழப்பீட்டுத் தொகையை உடன் வழங்க வேண்டும்.

சுரக்குடிப்பட்டியில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக முறையாக குத்தகை சாகுபடி செய்து வரும் 30-க்கும் மேற்பட்ட விவசாயிகளை காவல்துறை, வருவாய்த்துறை துணைகொண்டு வெளியேற்றும் முயற்சியை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதில், விவசாய சங்க மாவட்டத் தலைவர் வீர.மோகன், மாநில குழு உறுப்பினர் சாமு.தர்மராஜன், ஒன்றிய கவுன்சிலர் சு.லதா சுப்பிரமணியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பூதலூர் ஒன்றிய நிர்வாகிகள் கே.செந்தில்குமார், ஆர்.பாரதி உள்ளிட்ட 250-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in