Published : 07 Dec 2021 03:09 AM
Last Updated : 07 Dec 2021 03:09 AM

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் - ராணிப்பேட்டை நகராட்சி பொறியாளர் வீட்டில் சோதனை : ரூ.23 லட்சம் ரொக்கம், 182 பவுன் தங்க நகைகள், ஆவணங்கள் பறிமுதல்

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் ராணிப்பேட்டை நகராட்சி பொறியாளர் மற்றும் அவரது மனைவி மீது லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.23 லட்சம் ரொக்கம், 182 பவுன் தங்க நகைகள், சொத்து ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் அடுத்த லாலாப்பேட்டை சாவடி தெருவைச் சேர்ந்தவர் செல்வகுமார் (43). வேலூர் மாநகராட்சியில் உதவி பொறியாளராக பணியாற்றிய இவர் தற்போது ராணிப்பேட்டை நகராட்சி பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவர், அதிகளவில் லஞ்சப் பணம் வாங்குவதாக கிடைக்கப்பெற்ற புகாரின் பேரில் அவரது நடவடிக்கைகளை வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல் துறையினர் தொடர்ந்து கண்காணித்தனர். அவர், தொடர் பான விவரங்களையும் திரட்டினர்.

வழக்கு பதிவு

இதில், பொறியாளர் செல்வ குமார் கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பது தெரியவந்தது. இது தொடர்பான ஆவணங்களின் அடிப்படையில் செல்வகுமார் மற்றும் அவரது மனைவி சிவசங்கரி ஆகியோர் மீது வேலூர் லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல் துறையினர் சில நாட்களுக்கு முன்பு வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அதன் அடிப்படையில், திருவண்ணாமலை மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் மதியழகன் தலைமையில் சென்னை பிரிவு ஆய்வாளர் அன்பழகன் உள்ளிட்ட 8 பேர் அடங்கிய குழுவினர் பொறியாளர் செல்வகுமார் வீட்டில் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். காலை 9 மணியளவில் தொடங்கிய சோதனை இரவு 8 மணி வரை தொடர்ந்தது. இதில், ரூ.23 லட்சத்து 32 ஆயிரத்து 770 தொகை, 1,456 கிராம் (182 பவுன்) தங்க நகைகள், 10-க்கும் மேற்பட்ட சொத்து ஆவணங்கள், வங்கி பாஸ் புத்தகங்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x