Published : 27 Nov 2021 03:08 AM
Last Updated : 27 Nov 2021 03:08 AM

பாலியல் புகாருக்கு உள்ளான - கல்லூரி தாளாளருக்கு 3 நாள் போலீஸ் காவல் :

திண்டுக்கல்லில் பாலியல் புகாருக்கு உள்ளான கல்லூரித் தாளாளர் ஜோதிமுருகனை 3 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க திண்டுக்கல் மகளிர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

திண்டுக்கல் அருகே முத்தனம்பட்டியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியின் தாளாளர் ஜோதிமுருகன். மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இவர் மீது கூறப்பட்ட புகாரின்பேரில் ஜோதி முருகன் மீது தாடிக்கொம்பு போலீஸார் போக்ஸோ வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்குத் தொடர்பாக விடுதி காப்பாளர் அர்ச்சனாவை போலீஸார் ஏற்கெனவே கைது செய்தனர். தலைமறைவான ஜோதிமுருகனை தேடி வந்த நிலையில், அவர் திருவள்ளூர் மாவட்டம், போளூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதையடுத்து சிறையில் அடைக்கப்பட்ட அவரை, நேற்று பலத்த பாதுகாப்புடன் திண்டுக்கல் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார், 7 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி கோரினர்.

ஆனால், அவரை 3 நாள் மட்டும் காவலில் விசாரிக்க அனுமதித்து, நீதிபதி புருஷோத்தமன் உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x