Published : 17 Nov 2021 03:08 AM
Last Updated : 17 Nov 2021 03:08 AM

நிகழ் கல்வியாண்டில் நேரடித் தேர்வு நடத்தாமல் - ஆன்லைன் தேர்வு நடத்தக் கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் :

தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் நேரடித் தேர்வு நடத்தாமல் ஆன்லைன் முறையில் தேர்வு நடத்த வலியுறுத்தி கல்லூரி மாணவர்கள் நேற்று பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 300-க்கும் அதிகமான மாணவர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

போராட்டம் குறித்து மாணவர்கள் கூறும்போது, “கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடங்களை நடத்தப்பட்ட நிலையில், நேரில் பங்கேற்று தேர்வெழுதுவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. பிற மாநிலங்களில் ஆன்லைனில் தேர்வு நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் மட்டும் நேரடி தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, நிகழ் கல்வியாண்டில் மட்டும் ஆன்லைன் முறையிலேயே கல்லூரித் தேர்வுகளை நடத்த வேண்டும். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நாளை 5,000-க்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்கும் போராட்டம் நடத்தப்படவுள்ளது” என்றனர்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி புதுக்கோட்டை மன்னர் அரசு கல்லூரி வாசலில் மாணவர்கள் நேற்று தர்ணாவில் ஈடுபட்டனர். பின்னர், கோட்டாட்சியர் அபிநயா மற்றும் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து மாணவர்கள் கலைந்து சென்றனர்.

இதேபோல, அரியலூர் ஆட்சியர் அலுவலகம் முன் கீழப்பழுவூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x