Published : 04 Nov 2021 03:12 AM
Last Updated : 04 Nov 2021 03:12 AM

சீதோஷ்ண நிலை மாற்றத்தால் - சேலத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு :

சேலத்தில் கடந்த சில வாரங்களாக தொடர் மழை பெய்து வருவதால் சீதேஷ்ண நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் குளிர்ந்த காற்று வீசி வருகிறது. இதனால், பொதுமக்களுக்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது.

சேலம் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக பெய்து வரும் மழையால் சீதேஷ்ண நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால், கடந்த சில நாட்களாக சேலத்தில் பலருக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதேபோல, மருத்துவமனைகளில் உள்நோயாளியாக அனுமதியாகி சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. மழைக்காலங்களில் அசுத்தமான குடிநீர் குடிப்பதாலும், இனிப்பு உணவுகள் அதிகளவு எடுத்துக் கொள்வதால், உடல் நல பாதிப்பு ஏற்படுகிறது.

எனவே, மழை காலங்களில் குளிர்பானங்கள், பழைய உணவு, வெளியிடங்களில் தயாராகும் திண்பண்டங்களை தவிர்த்து உடல் ஆரோக்கியத்தை தற்காத்துக் கொள்வது அவசியம் என சுகாதாரத்துறை அலுவலர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

மழைக்காலங்களில் கொசுக்களால் ஏற்படும் மலேரியா, டெங்கு நோய் பரவலை தடுக்க வீட்டை சுற்றி மழை நீர் தேங்காமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். வீட்டை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள தேங்காய் சிரட்டை, டயர், உடைந்த டப்பா, உரல் உள்ளிட்ட வேண்டாத பொருட்களை அப்புறப்படுத்திட வேண்டும்.

அதேபோல, நீர் தேங்க வாய்ப்புள்ள இடங்களில் தண்ணீர் தேங்காமல் இருக்கும் வகையில், பொதுமக்கள் பாரத்துக் கொள்ள வேண்டும் என உள்ளாட்சி அமைப்புகள் வலியுறுத்தியுள்ளது. மேலும், சளி, காய்ச்சல் ஏற்பட்டால் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x