Published : 04 Nov 2021 03:12 AM
Last Updated : 04 Nov 2021 03:12 AM

மேட்டூர் அணை நீர்மட்டம் 112.28 அடியாக உயர்வு :

மேட்டூர் அணை நீர் மட்டம் 112.28 அடியாக உயர்ந்துள்ளது.

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துள்ள மழை, கர்நாடக மாநில அணைகளில் இருந்து திறக்கப்பட்டுள்ள தண்ணீர் காரணமாக மேட்டூர் அணைக்கு கடந்த சில வாரங்களாக விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடிக்கு மேல் நீர்வரத்து உள்ளது. அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 10 ஆயிரத்து 858 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று 10 ஆயிரத்து 904 கனஅடியாக அதிகரித்தது.

அணையில் இருந்து காவிரியில் விநாடிக்கு 100 கனஅடியும், கால்வாய் பாசனத்துக்கு 500 கனஅடியும் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. நீர் திறப்பை விட நீர்வரத்து அதிகரித்து இருப்பதால் தொடர்ந்து அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் 111.68 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று 112.28 அடியாக உயர்ந்தது. நீர்இருப்பு 81.69 டிஎம்சி-யாக உள்ளது.

14 ஆயிரம் கன அடியாக உயர்வு

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் நேற்று மீண்டும் நீர்வரத்து விநாடிக்கு 14 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.

பென்னாகரம் வட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் கடந்த மாதம் 31-ம் தேதி விநாடிக்கு 14 ஆயிரம் கனஅடி என்ற அளவில் நீர்வரத்து இருந்தது. இந்நிலையில், கடந்த 1-ம் தேதி விநாடிக்கு 10 ஆயிரம் கன அடியாகவும், 2-ம் தேதி விநாடிக்கு 9,000 கனஅடியாகவும் நீர்வரத்து குறைந்தது. இருப்பினும், நேற்று காலை அளவீட்டின்போது நீர்வரத்து அதிகரித்தது. விநாடிக்கு 14 ஆயிரம் கனஅடி என்ற அளவில் நீர்வரத்து பதிவானது. கடந்த இரு தினங்களாக ஒகேனக்கல் சுற்று வட்டாரப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

இதுதவிர, தமிழகத்தை நோக்கி வரும் காவிரியாறு அமைந்துள்ள வனப்பகுதியிலும் அவ்வப்போது மழை பெய்து வருவதால் நீர்வரத்து உயர்வு ஏற்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x