பாதாள சாக்கடை அடைப்பால் சாலையில் ஓடிய கழிவுநீர் :

கிருஷ்ணகிரி நகர பேருந்து நிலையம் செல்லும் சாலையில் பாதாள சாக்கடை கால்வாய் அடைப்பால், கழிவுநீர் வெளியேறி துர்நாற்றம் வீசியது.
கிருஷ்ணகிரி நகர பேருந்து நிலையம் செல்லும் சாலையில் பாதாள சாக்கடை கால்வாய் அடைப்பால், கழிவுநீர் வெளியேறி துர்நாற்றம் வீசியது.
Updated on
1 min read

கிருஷ்ணகிரியில் பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு சாலையில் ஓடிய கழிவுநீரால் பொதுமக்கள் அவதியுற்றனர்.

கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட 30-வது வார்டு பகுதி பெரியசாமி பிள்ளை தெரு. இத்தெருவின் வழியாக, கிருஷ்ணகிரி நகரப் பேருந்து நிலையத்திற்குச் செல்லும் பிரதானச் சாலை செல்கிறது. இச்சாலை வழியாக நாள்தோறும் 100-க்கும் மேற்பட்ட பேருந்துகள், வாகனங்கள் சென்று வருகின்றன. இதேபோல், இப்பகுதியில் தலைமை அஞ்சல் நிலையம் அமைந்துள்ளது.

இச்சாலையின் வழியே அருகிலுள்ள பள்ளிகளுக்கு ஏராளமான மாணவர்கள் செல்வதும் வழக்கம். நகரின் முக்கிய சாலையான இங்குபாதாள சாக்கடை அமைக்கப்பட்டுள்ளது. இதில், அடைப்பு ஏற்பட்டு கடந்த சில தினங்களாக கழிவு நீர் சாலையில் ஓடியும், பிளாஸ்டிக் குப்பைகள் தேங்கியும் துர்நாற்றம் வீசியுள்ளது. இதனைசீரமைக்கக் கோரி நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் கிருஷ்ணகிரிநகர காங்கிரஸ் தலைவர் லலித் மற்றும் சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் சபீக் அகமது உள்ளிட்டோர் தலைமையில் நேற்று திடீரென மறியல் செய்ய முயன்றனர்.

மேலும் நடவடிக்கை எடுக்காத நகராட்சியை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர். தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த, நகராட்சி பணியாளர்கள் பாதாள சாக்கடை அடைப்பினை உடனடியாக சீர் செய்து, சாலையை தூய்மைப்படுத்தினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in