Published : 16 Oct 2021 06:15 AM
Last Updated : 16 Oct 2021 06:15 AM

வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் - உள்ளாட்சி தேர்தலில் வென்றவர்கள் பதவி ஏற்கும் ஏற்பாடுகள் தீவிரம் : நெமிலி ஒன்றியத்தில் கள்ள வாக்கு சர்ச்சையால் ஆர்ப்பாட்டம்

வேலூர், ராணிப்பேட்டை மாவட் டங்களில் உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் வரும் 20-ம் தேதி பதவி ஏற்க உள்ள நிலையில், நெமிலியில் ஒரு கள்ள வாக்கு புகாரால் ஒரு வாக்கில் வென்ற அதிமுக வேட்பாளரின் வெற்றி அறிவிப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் கடந்த 6 மற்றும் 9-ம் தேதி இரண்டு கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத் தப்பட்டது. கடந்த 12-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தி முடிவுகள் வெளியிடப்பட்டன. வேலூர் மாவட்டத்தில் 14 மாவட்ட கவுன்சிலர், 138 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், 245 ஊராட்சி மன்றத் தலைவர் 2,070 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகள், ராணிப் பேட்டை மாவட்டத்தில் 13 மாவட்ட கவுன்சிலர், 127 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், 288 ஊராட்சி மன்றத் தலைவர் 2,220 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு வென்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற அனைத்து கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் வரும் 20-ம் தேதி பதவி ஏற்க உள்ளனர். இதனைத் தொடர்ந்து, வரும் 22-ம் தேதி மாவட்ட ஊராட்சி அலுவலகங்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், கிராம பஞ்சாயத்து அலுவலகங்களில் மறைமுக தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

முடிவுகளில் குளறுபடி

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு ஊராட்சி அதிகாரிகள் தேர்தலில் வென்ற வேட்பாளர் களுக்கு மாற்றாக வேறு நபருக்கு சான்றிதழ் வழங்கி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளனர். செதுவாலை கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு சேகர் என்பவர் 1,339 வாக்குகளுடன் வெற்றிபெற்ற நிலையில், 397 வாக்குகள் பெற்ற இருசப்பன் என்பவருக்கு வெற்றிக்கான சான்றிதழை நேற்று முன்தினம் கொடுத்து சலசலப்பை ஏற்படுத்தினர். இந்த விவகாரம் பெரிதாக எழவே அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் இருசப்பனிடம் கெஞ்சிக் கூத்தாடி வெற்றி சான்றிதழை நேற்று முன்தினம் இரவு திரும்பப்பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

நெமிலியில் ஒரு கள்ள வாக்கு?

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஊராட்சி ஒன்றியத்தின் 16-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கான தேர்தலில் மொத்தம் 5,273 வாக்குகள் பதி வாகியுள்ளன. இதில், அதிமுக வேட்பாளர் சுகுமார் 2,079, திமுக வேட்பாளர் மோகன்குமார் 2,078 வாக்குகள் பெற்றதால் ஒரு வாக்கு வித்தியாசத்தில் சுகுமார் வெற்றிபெற்றதாக அறிவிக்கப் பட்டது. ஆனால், ஒரே பெயரில் இரண்டு வார்டில் இருந்த பெண் வாக்காளர் ஒருவரின் வாக்கை அதிமுகவினர் 17 வயது நிரம்பிய சிறுமியை வைத்து கள்ள வாக்காக பதிவு செய்துள்ளனர் என்றும் தபால் வாக்குகளை முறையாக எண்ணாமல் முறைகேடு செய்து வெற்றிபெற்றுள்ளதாக திமுக தரப்பில் புகார் எழுப்பப்பட்டுள்ளது.

மேலும், அதிமுக வேட்பாளர் சுகுமாரின் பதவி ஏற்பை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கோரியும் திமுக வேட்பாளர் மோகன்குமாருக்கு ஆதரவாகவும், நெமிலி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக அவரது ஆதரவாளர்கள், பொதுமக்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த பிரச்சினை குறித்து நீதி மன்றத்தை நாட உள்ளதாக திமுக வேட்பாளர் மோகன்குமார் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x