Published : 19 Sep 2021 03:17 AM
Last Updated : 19 Sep 2021 03:17 AM
வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி வரும் 27-ம் தேதி விவசாயிகள் நடத்தும் முழு அடைப்புப் போராட்டத்துக்கு காங்கிரஸ் மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், "தாங்கள் ஆட்சிக்கு வந்தால், எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரையை நிறைவேற்றி, விளை பொருட்களுக்கு உரிய விலை வழங்குவதாகவும், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக மாற்றுவதாகவும் தேர்தல் வாக்குறுதி அளித்த பிரதமர் மோடி, இவற்றில் எதையும் இதுவரை நிறைவேற்றவில்லை.
இதற்கு மாறாக, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கடுமையாகப் பாதிக்கும் வகையில் 3 வேளாண் சட்டங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியிருக்கிறார்.
இந்த சட்டங்களை எதிர்த்து 10 மாதங்களாக டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக முழு அடைப்புப் போராட்டம் நடத்துவதாக, அகிலஇந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு அறிவித்துள்ளது.
மக்களின் நலனுக்காக தங்கள் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் விவசாயிகளின் கோரிக்கைகள் வெற்றி பெறுவதற்காக, வரும் 27-ம் தேதி ஐக்கிய விவசாயிகள் முன்னணி நடத்தும் முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கிறோம்.
இந்தப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்த காங்கிரஸ் கட்சியினரும், பொதுமக்களும் ஆதரிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
இதேபோல, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வரும் 27-ம் தேதி நடைபெறும் தேசிய அளவிலான விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கிறோம். கட்சியினரும், பொதுமக்களும் இப்போராட்டத்தை வெற்றிபெறச் செய்ய வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT