Published : 13 Jul 2021 03:15 AM
Last Updated : 13 Jul 2021 03:15 AM
மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன்கோவில் வைத்தியநாத சுவாமி கோயில் யானைக் குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக, வைத்தீஸ்வரன்கோவிலைச் சேர்ந்த சேகர் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு:
வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள வைத்தியநாத சுவாமி கோயிலைச் சுற்றி நீரை சேகரிக்கவும், நிலத்தடி நீரைப் பாதுகாக்கவும் ஏராளமான குளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்கோயிலில் பராமரிக்கப்படும் யானைகளைக் குளிக்க வைப்பதற்காக 4 ஏக்கர் பரப்பில் வெட்டப்பட்டுள்ள யானைக் குளத்தில் தற்போது 3 ஏக்கர் வரை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி பலமுறை அதிகாரிகளுக்கும், முதல்வரின் தனிப்பிரிவுக்கும் புகார் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசுக்கு உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இதில், “மனுதாரர் அளித்துள்ள மனுவை 8 வாரங்களில் பரிசீலித்து தகுந்த உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும். ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டால் சட்டப்படி அவற்றை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT