Published : 13 Jul 2021 03:15 AM
Last Updated : 13 Jul 2021 03:15 AM

திருத்துறைப்பூண்டி அருகே - வேன் ஓட்டுநர் கொலை; சகோதரர்கள் கைது :

திருத்துறைப்பூண்டி அருகே சரக்கு வேன் ஓட்டுநரை கொலை செய்ததாக சகோதரர்கள் கைது செய்யப்பட்டனர்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை அடுத்த பெரியநாயகிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாலு(70). இவருக்கு 5 மகன்கள், ஒரு மகள். இவர்கள் அனைவரும் அருகருகேயுள்ள குடிசைகளில் வசிக்கின்றனர். பாலுவின் மூத்த மகன் சஞ்சய் காந்தி(35), சரக்கு வேன் ஓட்டுநர். திருமணமாகாத இவர், அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து, குடும்பத்தினருடன் தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் மதியம் மதுபோதையில் வீட்டுக்கு வந்த சஞ்சய் காந்தி, தனக்கு ஏன் திருமணம் செய்துவைக்கவில்லை எனக்கூறி, குடும்பத்தினருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அவரை அக்கம்பக்கத்தினர் சமாதானப்படுத்தி அனுப்பிய நிலையில், அன்று இரவு மீண்டும் வந்து தகராறு செய்துவிட்டு, வீட்டுக்குள் சென்று தூங்கினார். இந்நிலையில், நேற்று அதிகாலை வீட்டுக்குள் கத்திக்குத்து காயங்களுடன் சஞ்சய்காந்தி சடலமாகக் கிடந்தார். தகவலறிந்த திருத்துறைப்பூண்டி போலீஸார் அங்கு சென்று, சஞ்சய் காந்தியின் சடலத்தை கைப்பற்றி, அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, விசாரணை நடத்தினர். இதில், மது அருந்திவிட்டுவந்து தந்தை பாலுவுக்கு அடிக்கடி தொல்லை கொடுத்துவந்ததால், சஞ்சய் காந்தியை அவரது சகோதரர்கள் புயலரசன், தினேஷ் ஆகியோர் கொலை செய்தது தெரியவந்ததையடுத்து, அவர்கள் இருவரையும் போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x