Published : 30 Jan 2021 03:15 AM
Last Updated : 30 Jan 2021 03:15 AM

பருவம் தவறி பெய்த மழையால் கடும் பாதிப்பு மழை, வெள்ளம் பாதித்த மாவட்டமாக திருப்பூரை அறிவிக்க விவசாயிகள் வலியுறுத்தல்

திருப்பூர்

பருவம் தவறி பெய்த மழையால் விவசாயிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதால், மழை, வெள்ளம் பாதித்த மாவட்டமாக திருப்பூரை அறிவிக்க வலியுறுத்தியுள்ளனர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட குழு, ஆட்சியர் க.விஜய கார்த்திகேயனுக்கு அனுப்பிய கடிதத்தில், "தமிழகத்தில் நடப்பு மாதம் 13, 14, 15 மற்றும்16-ம் தேதிகளில் பருவம் தவறி பெய்த மழையால், விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மழை வெள்ளச் சேதம் ஏற்பட்டுள்ள மாவட்டங்களின் பட்டியலில் திருப்பூர் விடுபட்டுள்ளது. ஆனால், உடுமலை, தாராபுரம், காங்கயம், மடத்துக்குளம் வட்டங்களில் நெல் பயிர் விளையும் தருவாயில், ஆயிரத்துக்கு மேற்பட்ட ஏக்கர் கடுமையாக சேதமடைந்து, பயிர்கள் எந்தவித பயனும் இன்றி நாசமடைந்துள்ளன.

அதேபோல, ஆண்டுக்கு ஒரு முறை பயிர் செய்யும் கொண்டைக்கடலை, கொத்துமல்லி போன்ற பயிர்களும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளன. தீவனச் சோளம், வெங்காயம், காய்கறி பயிர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஊத்துக்குளி, அவிநாசி, பல்லடம் உள்ளிட்டமாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மானாவாரி தீவன சோளத்தட்டை அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், தொடர் மழையால் பெரும் சேதமடைந்தது. ஆண்டு முழுவதும் கால்நடைகளுக்கு தீவனம் கிடைக்காமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் 10000-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலம் விளையும் தருவாயில் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, மழை, வெள்ளம் பாதித்த மாவட்டமாக திருப்பூரை அரசின் பட்டியலில் சேர்க்கவும், பயிர்வாரி பாதிப்புகளை கணக்கெடுத்து விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x