Published : 30 Jan 2021 03:15 AM
Last Updated : 30 Jan 2021 03:15 AM

கைத்தறி கூட்டுறவு சங்கத்திற்கான விற்பனை மானியத்தை 30 சதவீதமாக உயர்த்த வேண்டும் முதல்வருக்கு கைத்தறி நெசவாளர்கள் கோரிக்கை

ஈரோடு

பிரதம கூட்டுறவு சங்கத்திற்கு வழங்கப்படும் விற்பனை தள்ளுபடி மானியத்தை, 30 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும் என முதல்வருக்கு கைத்தறி நெசவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கைத்தறியால் நெய்யப்பட்ட துணிவகைகள் தேக்கமடையாமல் விற்பனை செய்யவும், கைத்தறி நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையிலும், பிரதம கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் உற்பத்தி செய்யப்படும் ஜவுளி ரகங்களுக்கு விற்பனை மானியம் வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது கரோனா பாதிப்பு காரணமாக கைத்தறி துணி வகைகள் விற்பனையாகாமல் தேக்கமடைந்துள்ளன. இதனால் கைத்தறி நெசவாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைச் சரி செய்யும் வகையில், இந்த ஆண்டு முதல் தமிழகம் முழுவதும் உள்ள கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கப்படும் தள்ளுபடி மானியத்தினை ரூ.150 கோடியில் இருந்து ரூ.300 கோடியாக உயர்த்தி தமிழக முதல்வர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

மானியத்தொகையை உயர்த்தி முதல்வர் அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், கைத்தறி நெசவாளர்கள் சங்கங்கள் ஜவுளி விற்பனையினை ஆண்டு முழுவதும் சீராக விற்பனை செய்ய, தள்ளுபடி மானியத்தொகையினை, 20 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக ஆண்டு முழுவதும் வழங்க வேண்டுமென நெசவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக சென்னிமலை பகுதியில் செயல்படும் 40-க்கும் மேற்பட்ட பிரதம கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் தலைவர்கள் தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x