Published : 14 Jan 2021 03:20 AM
Last Updated : 14 Jan 2021 03:20 AM

சூரியசக்தி பம்ப்செட் அமைக்க மானியம் பெற அழைப்பு திருப்பூர் ஆட்சியர் தகவல்

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் வெளியிட்ட அறிக்கையில், "திருப்பூர்மாவட்டத்தில் பிரதமரின் விவசாயிகளுக்கான எரிசக்தி பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ், சூரிய சக்தியால் (சோலார்) இயங்கும் மோட்டார் பம்ப் செட்டுகள் அமைக்கஆதிதிராவிட மற்றும் பழங்குடியினவிவசாயிகளுக்கு 13 பம்ப் செட்டுகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலமாக, விவசாயிகளுக்கு 5 குதிரைசக்தி (எச்.பி.) திறன் கொண்ட சோலார் பம்ப் செட் அமைக்க அதிகபட்சமாக ரூ.2 லட்சத்து 42303, 7.5 குதிரைசக்தி கொண்ட சோலார் பம்ப்செட் அமைக்க ரூ.3 லட்சத்து 67525, 10 குதிரைசக்தி கொண்ட சோலார் பம்ப் செட் அமைக்க ரூ.4 லட்சத்து 39629 செலவாகும். இதில், 70 சதவீதத் தொகை அரசு மானியமாக வழங்கப்படும்.

ஏற்கெனவே, இலவச மின் இணைப்பு கோரி மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் விண்ணப்பித்துள்ள விவசாயிகள், தங்கள் முன்னுரிமையை இழக்கவேண்டிய அவசியம் இல்லை. தங்களுக்குரிய இலவச மின் இணைப்பு முறை வரும்போது, சூரிய சக்தியால் இயங்கும் பம்ப்செட்டுகளை மின் கட்டமைப்புடன் இணைப்பதற்கான உறுதி கடிதத்தை, வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் வழங்க வேண்டும்.

இதுவரை இலவச மின் இணைப்பு வேண்டி விண்ணப்பிக்காத விவசாயிகள், புதிதாக பதிய வேண்டிய அவசியம் இல்லை. இத்திட்டத்தின் கீழ், சூரியசக்தியால் இயங்கும் பம்ப்செட்டுகள் அமைக்க விண்ணப்பிக்கும்போது, நுண்ணீர் பாசன அமைப்புடன் இணைக்க உறுதிமொழி அளிக்க வேண்டும். பயன்பெற விரும்பும் விவசாயிகள் திருப்பூர் தென்னம்பாளையத்தில் உள்ள வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்திலும், தாராபுரத்தில் உள்ள உதவி செயற்பொறியாளர் அலுவலகத்திலும், உடுமலையில் உள்ள உதவி செயற்பொறியாளர் அலுவலகத்திலும் விண்ணப்பித்து பயன்பெறலாம்" என்று குறிப்பிட்டுள்ள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x