Published : 14 Jan 2021 03:21 AM
Last Updated : 14 Jan 2021 03:21 AM

புதுவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.12 கோடியில் சிறு விளையாட்டு அரங்கம் அண்ணா திடலில் அமைகிறது - ஓராண்டில் பணியை முடிக்க திட்டம்

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதுச்சேரி நகரப்பகுதியில் உள்ள அண்ணா திடலில் ரூ. 12 கோடியில் சிறு விளையாட்டு அரங்கம்அமைக்கும் பணி நேற்று தொடங்கியது. ஓராண்டில் இப்பணியை முடிக்க திட்ட மிட்டுள்ளனர்.

புதுவை நகர பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு பள்ளிகளில் விளையாட்டு திடல் கிடையாது. மாநில விளையாட்டு அரங்கமான உப்பளம் மைதானத்திற்குத்தான் செல்ல வேண்டும். இதனால் நகர பகுதியில் விளையாட்டு அரங்கம் தேவைப்பட்டது.

தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அண்ணா திடலை ரூ.12 கோடியே 19 லட்சம் மதிப்பில் சிறு விளையாட்டு அரங்கமாக மேம்படுத்தும் பணி நடக்கிறது. இதற்கான தொடக்கவிழா நேற்று நடந்தது.

அண்ணா திடலில் இந்த புதிய விளை யாட்டரங்கு 14 ஆயிரத்து 435 சதுர மீட்டர் பரப்பில் பல்வேறு அம்சங்களுடன் அமைய உள்ளது. இதன் ஒரு பகுதியாக அடித்தளத்தில் 350 இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடம், தரைதளத்தில் 150 கடைகள், முதல் தளத்தில் 250 விளையாட்டு வீரர்கள் தங்கும் 14 தங்கும் கூடம், 1,500 பார்வையாளர்கள் அமரக்கூடிய பார்வையாளர் மாடம் அமைய உள்ளது. மேலும் அலுவலகம், சேமிப்பு கூடம், பயிற்சி கூடம், விளையாட்டு அரங்கம், கடை உரிமையாளர்களுக்கு கழிப்பிடம் ஆகியவையும் அமைய உள்ளது. பார்வையாளர்கள் மாடம், விழா நடத்தும் மேடையும் அமைக்கப்படும். விளையாட்டு மைதானத் தில் மாணவர்களுக்கு 200 மீட்டர் ஓடுபாதை, கால்பந்து, டென்னிஸ், ஆடுகளம், கைபந்துஆடுகளம், குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள், திறந்தவெளி உடற்பயிற்சி கூடம் ஆகியவையும் அமைக்கப்பட உள் ளது.

இயற்கை அழகுடன் கூடிய புல்வெளி, மரம், திறந்தவெளி இருக்கைகள், தகவல் பலகை, உயர்கோபுர மின் விளக்குகளும் அமைக்கப்பட உள்ளது. இப்பணி ஓராண்டில் முடிக்க திட்டமிட்டுள்ளனர்.

இந்நிகழ்வில் முதல்வர் நாராயணசாமி பேசுகையில், "கடந்த என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்துக்கு அனுமதி கிடைக்கவில்லை. காங்கிரஸ் அரசு முயற்சியால் கிடைத்தது. மத்திய அரசு முதலில் ரூ.500 கோடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை அறிவித்தது. ரூ.1,850 கோடி புதுச்சேரி அரசு பங்கு ஆகும். இத்திட்டத்தின் கீழ் நகர சாலைகள் அனைத்தும் மேம்படுத்தப்படும். பேட்டரி வாகனங்கள் இயக்கப்படும். புதைவடம் மின்பாதை, வாகனங்கள் கட்டுப்பாட்டு அறை, அண்ணாதிடல் மேம்பாடு, புதிய பேருந்து நிலையம் மேம்படுத்துவது, பெரிய மார்க்கெட் நவீனமயம், பழைய சிறை வளாகத்தில் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம், எல்இடி தெருவிளக்குகள், தடையின்றி குடிநீர், சோலைநகர் முதல் பெரியவீராம்பட்டினம் வரை விரிவாக்கம் செய்து நடைபயிற்சி சாலை அமைத்தல், வஉசி, கல்வே பள்ளியில் பிரெஞ்சு கலை நயத்துடன் கட்டுவது என 80 திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. இதில் 7 திட்டங்கள் தற்போது நடந்து வருகிறது. 29 திட்டங்கள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. 11 திட்டங்களுக்கு விரைவில் டெண்டர் விடப்பட உள்ளது” என்று தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம் பேசுகையில், "ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் புதுவை நகரைஅழகுபடுத்த பல்வேறு திட்டங்கள் செயல் படுத்தப்படுகிறது. சின்னையாபுரத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. புதுவை நகரின் வரலாறும், பழமையும் என்றும்நிலைத்திருக்க வேண்டும் என்பதே எங்கள்எண்ணம். நெரிசல் அதிகமாக உள்ள நகர பகுதியில் பல இடங்களில் பார்க்கிங் வசதியை மேம்படுத்த உள்ளோம். உப்பனாறு மேம்பாலத்தை கட்டி முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப் பணிக்க அழுத்தம் கொடுத்துள்ளோம். காமராஜர் மணிமண்டபம் ஒரு மாதத்தில் கட்டி முடிக்கப்பட உள்ளது. திருக்காஞ்சி பாலத்தில் இணைப்பு பணி முடிந்து மின் விளக்குகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. விரைவில் திறக்கப்படும்" என்று குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் தொகுதி எம்எல்ஏ சிவா, கல்வித்துறை செயலர் அன்பரசு, ஸ்மார்ட் சிட்டி திட்ட முதன்மை செயலாக்க அதிகாரி அருண் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்வில் முதல்வர் நாராய ணசாமியுடன் பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயமும், திமுக எம்எல்ஏ சிவாவும் பங்கேற்பார்களா என்ற கேள்வி இருந்தது. ஏனெனில், அமைச்சர் நமச்சிவாயம் காங்கிரஸிலிருந்து வெளியேற உள்ளதாக கருத்து பரவி வந்தது. அதேபோல் திமுகவும் ஆளும் காங்கிரஸுக்கு எதிராக கருத்து தெரிவிப்பதுடன், காங்கிரஸ் சார்ந்த நிகழ்வுகளையும் புறக்கணித்து வந்தது.

இதற்கிடையே முதல்வர் நாராயணசாமி, அமைச்சர் நமச்சிவாயம், திமுக எம்எல்ஏ சிவா ஆகிய 3 பேரும் இந்நிகழ்வில் பங்கேற்று, ஒரே மேடையில் கல்வெட்டுகளை திறந்து வைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x