Published : 14 Jan 2021 03:21 AM
Last Updated : 14 Jan 2021 03:21 AM

பைபர்நெட் இணைய சேவை வசதிக்கு அனுமதி தராமல் மத்திய அரசு நிறுத்திவைப்பு ராமநாதபுரம் எம்எல்ஏ மணிகண்டன் குற்றச்சாட்டு

வீடுகளுக்கு கேபிள் மூலம் அதிவேக இணையச் சேவை வழங்கும் பைபர்நெட் இணையச் சேவை வசதிக்கு அனுமதி தராமல் மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது என ராமநாதபுரம் எம்எல்ஏ மணிகண்டன் தெரிவித்தார்.

ராமநாதபுரம் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட 7 பள்ளிகளைச் சேர்ந்த 1,565 மாணவ, மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ராமநாதபுரம் செய்யது அம்மாள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்தார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி வரவேற்றார். மாவட்டக் கல்வி அலுவலர்கள் கோ.முத்துச்சாமி, சோ.கருணாநிதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாணவ, மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகளை ஆட்சியர் மற்றும் எம்.மணிகண்டன் எம்.எல்.ஏ. வழங்கினர்.

எம்.மணிகண்டன் எம்.எல்.ஏ. பேசும்போது, ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பு கல்வியாண்டில் 11-ம் வகுப்பு பயிலும் 10,930 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 4.31 கோடி மதிப்பில் மிதிவண்டிகள் வழங்கப்பட உள்ளன. தமிழகத்தில் இதுவரை 55 லட்சம் மடிக்கணினிகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. தற்போது மடிக்கணினி வைத்துள்ள மாணவர்களுக்கு 2 ஜிபி டேட்டா இணையதளம் வசதி இலவசமாக வழங்கப்பட உள்ளது.

ரூ.2,252 கோடி மதிப்பீட்டில் கேபிள் மூலம் இணையச்சேவை வழங்கும் பைபர்நெட் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி தராமல் நிறுத்தி வைத்துள்ளது. இத்திட்டம் வந்தால் தொலைக்காட்சி வழி இணையதளம் மூலம் அனைத்து ஆன்லைன் சேவைகளையும் வீடுகளில் பெற முடியும் என்று பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x