Published : 14 Jan 2021 03:21 AM
Last Updated : 14 Jan 2021 03:21 AM

மதுரையில் தொடரும் அடை மழை அச்சத்தில் ஜல்லிக்கட்டு விழாக்குழுவினர்

மதுரை

மதுரையில் தொடரும் அடைமழையால் ஜல்லிக்கட்டுப் போட்டியை தடையில்லாமல் நடத்த முடியுமா? என விழாக்குழுவினர் கவலை அடைந்துள்ளனர்.

மதுரையில் வடகிழக்குப் பருவமழை வழக்கத்துக்கு அதிகமாகவே பெய்துள்ளது. கடந்த சில நாட்களாக அடைமழை பெய்து வருகிறது.

மழை விட்டாலும் தூறல் விடாமல் பெய்கிறது. நேற்றும் மதுரை நகர் பகுதிகள், கிராமங்களில் மழை பெய்தது. மக்கள் அடைமழையையும் பொருட்படுத்தாமல் பொங்கல் பொருட்களை வாங்கிச் சென்றனர்.

இந்நிலையில், இன்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டும், நாளை பாலமேட்டிலும், நாளை மறுநாள் அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடக்கிறது. ராகுல்காந்தி அவனியாபுரம் ஜல்லிக்கட்டை பார்வையிட வருவதால் இந்தப் போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் அடை மழை பெய்து வருவதால் ஜல்லிக்கட்டு விழாக்கள் தடையில்லாமல் நடக்குமா என மாவட்ட நிர்வாகமும், விழாக்குழுவினரும் கவலை அடைந்துள்ளனர்.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்கு விழாக்குழுவினர் ஏராளமானோரிடம் ஸ்பான்சர் பெற்று பரிசுகளை வாங்கியுள்ளனர். மேலும், விழா ஏற்பாட்டுக்கும் பெருமளவில் செலவிட்டுள்ளனர்.

போட்டியில் பங்கேற்க டோக்கன் பெற்ற காளை உரிமையாளர்கள் நேற்று காலை முதலே வாகனங்களில் காளைகளை ஏற்றிக் கொண்டு தமிழகம் முழுவதும் இருந்து அவனியாபுரத்துக்கு வந்துள்ளனர்.

மாடுபிடி வீரர்களும் கடந்த ஒரு வாரமாக உடல் தகுதி, கரோனா பரிசோதனை உள்ளிட்ட சோதனைகளை கடந்து, கடந்த ஒரு மாதமாக தீவிர பயிற்சி எடுத்து வருகின்றனர். இந்தச் சூழலில் அடை மழையால் ஜல்லிக்கட்டு தடைப்பட்டால் காளை உரிமையாளர்கள், வீரர்கள், ஸ்பான்சர் செய்தவர்கள் என அனைத்து தரப்பினரும் மிகுந்த ஏமாற்றம் அடைவர். அதனால் தற்போது பொங்கல் பண்டிகை முடியும் வரையாவது மழை பெய்யாமல் இருக்க வேண்டி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x