Published : 08 Dec 2021 04:08 AM
Last Updated : 08 Dec 2021 04:08 AM

ரூ.61 கோடி செலவில் - சென்னை பள்ளிகள் சீரமைப்பு :

சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சட்டப்பேரவையில் திருத்திய நிதிநிலை அறிக்கையின் விவாதத்தின்போது பேசிய நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர், சென்னைப் பள்ளிகள் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்படும் என அறிவித்தார். அதன் அடிப்படையில், நுங்கம்பாக்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, எம்.ஜி.ஆர் நகர் மேல்நிலைப் பள்ளி, பந்தர் கார்டன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட 8 சென்னைப் பள்ளிகளில் ரூ.21.77 கோடி மதிப்பில் புதிய வகுப்பறைகள் உட்பட கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகளுக்கு ஒப்பம் கோரப்பட்டுள்ளது.

ஏற்கெனவே காந்தி கிராமம் நடுநிலைப் பள்ளி உள்ளிட்ட 6 சென்னைப் பள்ளிகளில் ரூ.17.38 கோடி மதிப்பில் புதிய வகுப்பறைகள் உள்ளிட்ட கட்டமைப்புகளை மேம்படுத்தும் பணிகளுக்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. மேலும், நுங்கம்பாக்கம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, சைதாப்பேட்டை ஆண்கள்மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட 12 சென்னைப் பள்ளிகளில் ரூ.22.55 கோடி மதிப்பில் வகுப்பறைகள் உட்பட கட்டமைப்புகளை மேம்படுத்தும் பணிகளுக்கு திட்ட மதிப்பீடு தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தப் பணிகளுக்கான திட்ட மதிப்பீடு முடிவுற்றவுடன் நிர்வாக அனுமதி பெறப்பட்டு விரைவில் ஒப்பந்தம் கோரப்படும். இதன்மூலம் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட சென்னைப் பள்ளிகளின் உட்கட்டமைப்புகள் ரூ.61.70 கோடி மதிப்பில் நவீன வசதிகளுடன் சீரமைக்கப்பட உள்ளது.

சென்னைப் பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகள் முழுமையடையும்போது, சென்னைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல்திறன், அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த கல்வித் திறன் ஆகியவை மேம்பட்டு அவர்களின் எதிர்காலம் வளமானதாக அமையும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x