Published : 08 Dec 2021 04:10 AM
Last Updated : 08 Dec 2021 04:10 AM

பட்டுக்கோட்டையில் தாயை கொன்ற மகன் கைது :

பட்டுக்கோட்டையில் போதையில், தனது தாயை இரும்பு கம்பியால் குத்தி கொலை செய்த மகனை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை, மேலத்தெருவைச் சேர்ந்தவர் அஞ்சலையம்மாள்(70). இவருடைய கணவர் காசிநாதன். சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.

அஞ்சலையம்மாள், தன்னுடைய மகனான பெயின்டர் வேலை பார்க்கும் பாவைநாதன்(38), அவருடைய மனைவி சரண்யா மற்றும் பேரக் குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பாவைநாதன், மதுபோதையில் வீட்டுக்கு வந்து, அஞ்சலையம்மாளிடம் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். அப்போது, சரண்யா அவரை தடுத்துள்ளார். சிறிது நேரத்தில் வீட்டில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து அஞ்சலையம்மாள் இடுப்பில் குத்திக் கீழே தள்ளியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த அஞ்சலையம்மாளை அருகில் இருந்தவர்கள் மீட்டு, பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அஞ்சலையம்மாளை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

உடனடியாக அங்கிருந்து, அவரது உடலை வீட்டுக்கு எடுத்து வந்து நேற்று காலை இறுதி சடங்கு செய்ய முயன்றுள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த பட்டுக்கோட்டை போலீஸார், நேற்று காலை அஞ்சலையம்மாள் உடலை கைப்பற்றி, உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர், பாவைநாதனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x