Published : 08 Dec 2021 04:10 AM
Last Updated : 08 Dec 2021 04:10 AM

‘மீண்டும் மஞ்சள் பை’ திட்டம்: முதல்வர் விரைவில் தொடங்குவார் : அமைச்சர் மெய்யநாதன் தகவல்

புதுக்கோட்டை

பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக 'மீண்டும் மஞ்சள் பை' திட்டம் விரைவில் தொடங்கப்படும் என மாநில சுற்றுச்சூழல்- காலநிலை மாற்றத் துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மறமடக்கி அரசு தொடக்கப் பள்ளியில் ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் நேற்று நடைபெற்ற பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பின்னர், செய்தியாளர்களிடம் கூறியது:

தமிழகத்தை பிளாஸ்டிக் இல்லாத மாநிலமாக மாற்றுவதற்காக 'மீண்டும் மஞ்சள் பை' எனும் திட்டத்துக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தை தமிழக முதல்வர் விரைவில் தொடங்கி வைக்க உள்ளார்.

கடந்த காலங்களில் மஞ்சள் பையை பயன்படுத்தி வந்தோம். எதிர்காலத்தில் மக்களை பேரிடரில் இருந்து பாதுகாக்க வேண்டுமெனில் தற்போது, பிளாஸ்டிக் பயன்பாட்டை அனைவரும் கைவிட வேண்டும். பொங்கல் விழாவை முன்னிட்டு ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் பரிசு பொருட்கள் துணிப்பையிலேயே வழங்கப்படும். பொங்கல் பண்டிகையின்போது அரசு சார்பில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x