Published : 04 Dec 2021 03:10 AM
Last Updated : 04 Dec 2021 03:10 AM

திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோயிலில் - கடைஞாயிறு விழா கொடியேற்றம் : டிச.12-ம் தேதி சூரிய புஷ்கரணியில் தீர்த்தவாரி

திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோயிலில் கடைஞாயிறு விழா கொடியேற்றம் நேற்று நடைபெற்றது. இதையடுத்து, டிச.12–ம் தேதி சூரியபுஷ்கரணியில் தீர்த்தவாரி நடைபெறவுள்ளது.

கும்பகோணத்தை அடுத்த திருநாகேஸ்வரத்தில் உள்ள நாகநாத சுவாமி கோயிலில் நவக்கிரகங்களில் ராகுபகவான் தனி சன்னதியில் மங்கள ராகுவாக அருள்பாலித்து வருகிறார்.

பல்வேறு சிறப்பு பெற்ற இக்கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் கடை ஞாயிறு விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, நேற்று முன்தினம் திருமண் எடுத்தல், முளைப்பாலிகையிடுதல், திருக்காப்பு கட்டுதல் நடைபெற்றன.

தொடர்ந்து, நேற்று காலை கொடியேற்றம் நடைபெற்றது. இதையொட்டி, கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, மங்களவாத்தியங்கள் முழங்க கொடியேற்றப்பட்டது. அப்போது, கொடிமரம் அருகே உற்சவரான சோமஸ்கந்தர் கிரிகுஜாம்பிகையுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.

டிச.10–ம் தேதி வரை பல்வேறு வாகனங்களில் உற்சவர் சுவாமிகளின் புறப்பாடு கோயில் உள்பிரகாரத்தில் நடைபெறும். டிச.11-ம் தேதி காலை 7 மணி முதல் 8.30 மணிக்குள் தேரோட்டமும், 12–ம் தேதி காலை 10 மணிக்கு பஞ்சமூர்த்திகள் வெள்ளி வாகனங்களில் புறப்பாடும், மதியம் 2 மணிக்கு, கோயிலின் உள்ளே உள்ள சூரிய புஷ்கரணியில் தீர்த்தவாரியும் நடைபெற உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x