Published : 12 Nov 2021 03:17 AM
Last Updated : 12 Nov 2021 03:17 AM

மழை, பனிமூட்டத்தால் நெற்பயிரில் இலைசுருட்டுப்புழு தாக்குதல் : கட்டுப்படுத்த வேளாண் துறை அறிவுரை

ஈரோடு

தொடர்மழையால் நெற்பயிரில் ஏற்படும் இலை சுருட்டுப்புழு தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகளை வேளாண்மைத்துறை தெரிவித்துள்ளது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டாரத்தில் காஞ்சிக்கோவில், பெத்தாம்பாளையம், பாண்டியம்பாளையம், நல்லாம்பட்டி ஆகிய கிராமங்களில் நெற்பயிரில் இலை சுருட்டுப்புழு தாக்குதல் ஏற்பட்டுள்ளது. மேலும், தொடர் மழை, பனி மூட்டம் காரணமாக, நெற்பயிரில் இலை சுருட்டுப் புழு தாக்குதல் பல்வேறு பகுதிகளில் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

தூர் பிடிக்கும் பருவத்தில் உள்ள பயிர்களை தாக்கும் இந்தப் புழுக்கள், இலைகளை உள்பக்கமாக சுருட்டி உள்ளிருந்து பச்சையத்தை சுரண்டி உண்கின்றன. புழுக்கள் இலைகளின் பச்சை நிற திசுக்களை சுரண்டுவதால், இலைகள் வெண்மையாக மாறி காய்ந்துவிடும். தீவிர தாக்குதலின்போது முழு நெல் வயலும் வெண்மையான நிறத்தில் காய்ந்தது போல் காட்சியளிக்கும். இலைகள் நீள்வாட்டில் சுருண்டு புழுக்கள் அதனுள்ளே இருந்துவிடும்

கட்டுப்படுத்தும் முறை

பூச்சியின் தாக்குதல் இருக்கும் சமயத்தில், தழைச்சத்து உரங்களை வயலில் இடுவதை குறைக்க வேண்டும். வரப்புகளை சீராக்கி, அதனை சுத்தமாக வைக்க வேண்டும். வயலில் புழுவின் அந்து பூச்சிகளின் நடமாட்டத்தை அறிந்து விளக்கு பொறி வைத்து கவர்ந்து அழிக்கலாம்.

மேலும், தாவர பூச்சிக் கொல்லியான அசாடிரக்டீன் 0.03 சதவீதக் கரைசலை ஏக்கருக்கு 400 மில்லி தெளிக்கலாம். ரசாயன பூச்சிக் கொல்லிகளான கார்ட்ஃப் 50 சதவீதம் தூளை ஏக்கருக்கு 400 கிராம் (அல்லது) குளோர்பைரிபால் 20 இ.சி. 500 மில்லி உபயோகித்து கட்டுப்படுத்தலாம் என பெருந்துறை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் குழந்தைவேலு தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x