Published : 03 Nov 2021 03:09 AM
Last Updated : 03 Nov 2021 03:09 AM

பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் - சிறப்பு டிஜிபி மீதான வழக்கு 8-ம் தேதிக்கு ஒத்தி வைப்பு :

பெண் எஸ்பிக்கு சிறப்பு டிஜிபி பாலியல் தொல்லை அளித்ததாக கொடுத்த புகார் மீதான வழக்கு வரும் 8-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தமிழக காவல்துறையில் சிறப்பு டிஜிபியாக பணியாற்றி வந்தவர் தனக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கடந்த ஏப்ரல் மாதம் பெண் எஸ்.பி ஒருவர் புகார் அளித்திருந்தார். இதையடுத்து, அப்போதைய காவல்துறை சிறப்புடிஜிபி மற்றும் அவருக்கு உதவியசெங்கல்பட்டு எஸ்.பி ஆகிய இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதோடு, பாலியல் புகார்குறித்து சிபிசிஐடி போலீஸார் விசா ரணை நடத்த உத்தரவிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, முன்னாள் டிஜிபி மற்றும் அவருக்கு உதவிய செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். வழக்கு விசாரணை முடிந்து முன்னாள் சிறப்பு டிஜிபி மற்றும் செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி ஆகியோர் மீது 400 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிக்கையை விழுப்புரம் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீஸார் கடந்த ஜீலை மாதம் 29-ம் தேதி தாக்கல் செய்தனர்.

இதனைத்தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் 9-ம் தேதி விழுப்புரத்தில் உள்ள மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜரான முன்னாள் சிறப்பு டிஜிபி , செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி ஆகிய இருவருக்கும் குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்பட்டு, இருவருக்கும் ஜாமீன் வழங்கப் பட்டது. தொடர்ந்து வழக்கு விசா ரணை கடந்த 3 மாதங்களாக நடை பெற்று வருகிறது.

இந்நிலையில் தன் மீதான வழக்கை விழுப்புரம் நீதிமன்றத்தில் விசாரிக்க தடை விதிக்க கோரி முன்னாள் சிறப்பு டிஜிபி தாக்கல் செய்திருந்த மனுவை கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததோடு, வழக்கு விசாரணையை 3 மாதங்களில் முடிக்க விழுப்புரம் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது.

இந்நிலையில் நேற்று இவ் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சிறப்பு டிஜிபி, முன்னாள் எஸ்பி ஆகியோர் ஆஜராகவில்லை. அவர்கள் ஆஜராவதிலிருந்து விலக்கு கேட்டு அவரவர் வழக்கறிஞர்கள் மனுத்தாக்கல் செய்தனர். இதனை ஏற்றுக்கொண்ட நடுவர்கோபிநாதன் வழக்கு விசார ணையை வருகிற 8-ம் தேதி ஒத்தி வைத்து, அன்று குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x