Published : 03 Nov 2021 03:10 AM
Last Updated : 03 Nov 2021 03:10 AM

மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,268 கோடியில் உபகரணங்கள் : மத்திய அரசு வழங்கியுள்ளதாக இணை அமைச்சர் ஏ.நாராயணசாமி தகவல்

நாடு முழுவதும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,268.44 கோடிக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன என மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணை அமைச்சர் ஏ.நாராயணசாமி தெரிவித்தார்.

தஞ்சாவூரில் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவிகள் மற்றும் உபகரணங்கள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.

இதில், மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணை அமைச்சர் நாராயணசாமி, மத்திய மீன்வளம், கால்நடை வளர்ப்பு மற்றும் தகவல் ஒளிபரப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் கலந்துகொண்டனர். முகாமில், 1,705 பயனாளிகளுக்கு ரூ.1.48 கோடி மதிப்பிலான, 3,770 உபகரணங்கள் வழங்கப்பட்டன.

இதில், மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்களை வழங்கி மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி பேசியது:

நரேந்திர மோடி 2014-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பிறகு நாடு முழுவதும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10,933 முகாம்கள் நடத்தப்பட்டு, ரூ.1,268.44 கோடிக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 20.74 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.

தமிழகத்தில் மட்டும் 410 முகாம்கள் நடத்தப்பட்டு, ரூ.42.84 கோடியில் 92 ஆயிரம் பேருக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிக்கான அடையாள அட்டை தமிழகத்தில் இதுவரை 3.93 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் 8,576 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ரூ.23.60 கோடிக்கு உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தீனதயாள் மாற்றுத்திறனாளி மறுவாழ்வு திட்டத்தின் கீழ் 7,266 பேர் பயன்பெறுகின்றனர். இதற்காக மத்திய அரசு ரூ.12.90 கோடி வழங்கியுள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கு மத்திய அரசு மூலம் பல்வேறு திறன்மேம்பாட்டு பயற்சிகள் அளிக்கப்படுகிறது. பயற்சி பெறும் அனைவரும், பெரிய தடைகளை தாண்டி, விடாமுயற்சியால் சூப்பர் ஹீரோவாகிறார்கள். அவர்கள் பாரா ஒலிம்பிக் போட்டியில் பல்வேறு பதக்கங்களை வென்றுள்ளனர்.

இதேபோல, அனைத்து மாற்றுத்திறனாளிகளும் நாட்டுக்கு பெருமை சேர்க்கும் வகையில் செயலாற்ற வேண்டும். அவர்களுக்காக உதவி உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் அதற்கான வழிவகை செய்யும் என்றார்.

ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், பாஜக மாநில துணைத் தலைவர் கருப்பு முருகானந்தம், மாவட்டத் தலைவர்கள் இளங்கோ, சதீஸ்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x