Published : 31 Oct 2021 03:12 AM
Last Updated : 31 Oct 2021 03:12 AM

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் - ஒரே நாளில் 74,914 பேருக்கு கரோனா தடுப்பூசி : உயிரிழந்தவர் பெயருக்கு தடுப்பூசி செலுத்திய குறுஞ்செய்தியால் சர்ச்சை

வேலூர் சத்துவாச்சாரி கங்கையம்மன் கோயில் பகுதி அருகே நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமை நேற்று மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு செய்தார். அடுத்த படம்: தி.மலை மாவட்டம் கீழ்சிறுப்பாக்கம் கிராமத்தில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை ஆய்வு செய்த ஆட்சியர் பா.முருகேஷ்.

வேலூர்/திருப்பத்தூர்/ராணிப்பேட்டை

ஒருங்கிணைந்த வேலூர் மாவட் டத்தில் நடைபெற்ற 7-வது மாபெரும் கரோனா தடுப்பூசி முகாமில் 74,914 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில், காட்பாடி பகுதியில் 5 மாதங்களுக்கு முன்பு உயிரிழந்த முதியவருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக வந்த குறுஞ்செய்தியால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 10.96 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். இதில், முதல் டோஸ் தடுப்பூசியை 7.62 லட்சம் பேரும், இரண்டாம் டோஸ் தடுப்பூசியை 3.33 லட்சம் பேரும் செலுத்திக்கொண்டுள்ளனர். மாவட்டத்தில் நடைபெற்ற 7-வது மாபெரும் தடுப்பூசி முகாம் 910 இடங்களில் நேற்று நடைபெற்றது. சத்துவாச்சாரி கெங்கையம்மன் கோயில், ஆதிதிராவிடர் நல ஆரம்ப பள்ளி, ஹோலிகிராஸ் பள்ளிகளில் நடைபெற்ற முகாமை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் நேற்று ஆய்வு செய்தார். மாவட்டத்தில் நேற்று 35,374 பேருக்கு தடுப்பூசி செலுத்தப் பட்டது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் மொத்தம் 7.45 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். இதில், முதல் டோஸ் தடுப்பூசியை 5.40 லட்சம் பேரும், இரண்டாம் டோஸ் தடுப்பூசியை 2.04 லட்சம் பேரும் செலுத்திக்கொண்டுள்ளனர். மாவட்டத்தில் உள்ள கொரட்டி, சின்னூர், பாலூர், சோமலாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வீடு, வீடாகச் சென்று தடுப்பூசி செலுத்தும் பணியை மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) தங்கையாபாண்டியன் ஆய்வு செய்தார். மாவட்டத்தில் நேற்று 22,500 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மொத்தம் 7.29 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள் ளது. இதில், முதல் டோஸ் தடுப்பூசியை 5.56 லட்சம் பேரும், இரண்டாம் டோஸ் தடுப்பூசியை 1.73 லட்சம் பேரும் செலுத்திக்கொண்டுள்ளனர். அரக்கோணம் நகர அரங்கில், பனப்பாக்கம் அரசினர் ஆண்கள் மேல்நிலை பள்ளி, அம்மூர் பேருந்து நிலையம், வேலம் அரசினர் மேல்நிலை பள்ளி, முத்துக்கடை பேருந்து நிலையம், ஓச்சேரி தொடக்க பள்ளிகளில் நடைபெற்ற முகாமை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன், மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் ஆகியோர் ஆய்வு செய்தனர். மாவட்டத்தில் நேற்று 17,040 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 74,914 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

உயிரிழந்தவருக்கு தடுப்பூசி

காட்பாடி அடுத்த கல்புதூர் ராஜலிங்கம் நகரைச் சேர்ந்தவர்அண்ணாமலை (83). கடந்த ஏப்ரல் 15-ம் தேதி முதல் டோஸ் தடுப் பூசியை செலுத்திக்கொண்டவர், அதன் பிறகு ஏற்பட்ட உடல்நலக் குறைவால் கடந்த மே மாதம் 6-ம் தேதி உயிரிழந்துவிட்டார். அண்ணாமலையின் செல்போனை அவரது மகன் சீனிவாசன் பயன்படுத்தி வருகிறார். அந்த செல்போனுக்கு நேற்று மாலை இரண்டாவது டோஸ் தடுப்பூசியை அண்ணாமலை செலுத்திக்கொண்டதாக வந்த குறுஞ்செய்தியைப் பார்த்து சீனிவாசன் அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, " உயிரிழந்தவர் பெயரில் தேர்தலில் வாக்களித்ததை கேட்டிருக்கிறோம். இப்போது, தடுப்பூசி போடுகிறார்கள்" என்றார்.

இதுகுறித்து, வேலூர் மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, ‘‘எந்த மையத்தில் இருந்து அதுபோன்ற பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என்று விசாரிக்கப்படும்’’ என தெரிவித்தனர்.

திருவண்ணாமலை

தி.மலை மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் கடந்த செப்டம்பர் 12-ம் தேதி முதல் வாரந்தோறும் நடைபெறுகிறது. இதுவரை நடைபெற்றுள்ள 6 கட்ட சிறப்பு முகாம்கள் மூலமாக 4,92,739 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதன்மூலம் திருவண்ணாமலை மாவட்டத்தில் முதற் கட்ட தடுப்பூசியை 63 சதவீதம் பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. மேலும், இரண்டாம் கட்ட தடுப்பூசியை 22 சதவீதம் பேருக்கு மட்டுமே செலுத்தப்பட்டுள்ளது. 1.72 லட்சம் பேர், இரண்டாம் கட்ட தடுப்பூசியை செலுத்தி கொள்ள முன்வரவில்லை என சுகாதாரத் துறை புள்ளி விவரங்களில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், தி.மலை மாவட்டத்தில் 7-வது கட்ட தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. இதற்காக 1,075 இடங்களில் முகாம் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுகாதாரத் துறையினர், கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டனர். மாவட்டம் முழுவதும் நடைபெற்ற கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமில் 78,097 பேர் நேற்று தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

தண்டராம்பட்டு அடுத்த கீழ்சிறுபாக்கம் கிராமத்தில் நடைபெற்ற தடுப்பூசி செலுத்தும் முகாமை ஆட்சியர் பா.முருகேஷ் ஆய்வு செய்தார். அப்போது அவர், 2-ம் கட்ட தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களை கண்டறிந்து தடுப்பூசி செலுத்த வேண்டும் என அறிவுறுத்தினார். அப்போது, கோட்டாட்சியர் வெற்றிவேல் உட்பட பலர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x