Published : 30 Oct 2021 03:16 AM
Last Updated : 30 Oct 2021 03:16 AM

கனமழையால் பாபநாசம் அணை நிரம்புகிறது :

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் நேற்று முன்தினம் மாலையிலிருந்து நேற்று காலை வரை விடிய விடிய மழை பெய்தது. மழை நேற்று காலையிலும் நீடித்தது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

திருநெல்வேலி டவுன், பேட்டை, பாளையங்கோட்டை பகுதிகளில் சாலைகள் சேதமடைந்தன. திருநெல்வேலி டவுனில் முக்கிய சாலைகள் சேறும் சகதியுமாக மாறியதால் வாகன ஓட்டிகள் அவதியுற்றனர். சந்தைகளில் வியாபாரம்பாதிக்கப்பட்டது. நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. பள்ளிகளுக்கு விடுமுறைவிடப்பட்டது. ஆனால், கல்லூரிகள் வழக்கம்போல செயல்பட்டன.

திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி பெய்த மழையளவு (மி.மீட்டரில்):

பாபநாசம்- 22 , சேர்வலாறு- 29, மணிமுத்தாறு- 21.8 , நம்பியாறு- 10 , கொடுமுடியாறு- 20 ,அம்பாசமுத்திரம்- 32 , சேரன்மகாதேவி- 29.6 , நாங்குநேரி- 7.5, மூலக்கரைப்பட்டி- 30, பாளையங்கோட்டை- 20, திருநெல்வேலி- 13.

143 அடி உச்சநீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் 134.90 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1044.56 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 1404.75 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. 118 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 79.60 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 282 கனஅடி தண்ணீர் வந்து கொண்டி ருந்தது.

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று அதிகாலையில் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் 5 மணி நேரத்துக்கும் மேலாக மழை தூறிக்கொண்டே இருந்தது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

நேற்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக அடவிநயினார் அணையில் 70 மி.மீ. மழை பதிவானது. ஆய்குடியில் 41 மி.மீ., தென்காசியில் 22 மி.மீ., செங்கோட்டையில் 16 மி.மீ., குண்டாறு அணையில் 14 மி.மீ., கருப்பாநதி அணையில் 13 மி.மீ., கடனாநதி அணை, ராமநதி அணையில் தலா 10 மி.மீ., சங்கரன்கோவிலில் 9 மி.மீ., சிவகிரியில் 1 மி.மீ. மழை பதிவானது.

தொடர் மழையால் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. 85 அடி உயரம் உள்ள கடனாநதி அணை நீர்மட்டம் நேற்று 82.40 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 117 கனஅடி நீர் வந்தது. 90 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. 74 அடி உயரம் உள்ள ராமநதி அணை நீர்மட்டம் 74 அடியாக இருந்தது. 72 அடி உயரம் உள்ள கருப்பாநதி அணை நீர்மட்டம் 69.56 அடியாக இருந்தது.

132.22 அடி உயரம் உள்ள அடவிநயினார் அணை நீர்மட்டம் 127 அடியாக இருந்தது. குண்டாறு அணை தொடர்ந்து முழு கொள்ள ளவில் உள்ளது.

மழை நீடித்தால் கடனாநதி அணை, கருப்பாநதி அணை, அடவிநயினார் அணை ஆகியவை ஓரிரு நாட்களில் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x