Published : 30 Oct 2021 03:16 AM
Last Updated : 30 Oct 2021 03:16 AM

புதிய வகுப்பறை கட்ட ரூ.10 லட்சம் நிதி வழங்கிய  சக்தி அம்மா - வேலூர் ஊரீஸ் பள்ளியில் புதிய கட்டிடம் திறப்பு :

வேலூர் ஊரீஸ் மேல்நிலை பள்ளியின் 150-வது ஆண்டு விழாவை முன்னிட்டு  நாராயணி பீடத்தின் நிதியில் கட்டப்பட்ட புதிய வகுப்பறை கட்டிடங்களை  சக்தி அம்மா திறந்து வைத்தார்.

வேலூர் ஊரீஸ் மேல்நிலைப் பள்ளி தொடங்கப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு பள்ளிக்கு தேவையான சிறப்பு வகுப்பறைகள் கட்டுவதற்கு புரம் நாராயணி பீடம் சார்பில் கடந்த 2015-ம் ஆண்டு  சக்தி அம்மா ரூ.10 லட்சம் நிதியை வழங்கினார்.

இந்த நிதியில், கட்டப்பட்ட புதிய வகுப்பறை கட்டிடங்கள் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

ஊரீஸ் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு  சக்தி அம்மா தலைமை தாங்கியதுடன் புதிய வகுப்பறைகளை திறந்து வைத்து அருளாசி வழங்கினார்.

அப்போது, பள்ளி வளாகத்தில் புதிய வகுப்பறைகள் கட்டுவதற்காக மேலும் ரூ.10 லட்சம் நிதியை  சக்தி அம்மா வழங்கினார். மேலும், பள்ளியின் 150-வது ஆண்டு விழா கல்வெட்டை வேலூர் பிஷப் ஹென்றி சர்மா நித்யானந்தம் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், விஐடி வேந்தர் கோ.விசுவநாதன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி, கல்வி மாவட்ட அலுவலர் சம்பத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முன்னதாக பள்ளிக்கு வருகை தந்த சக்தி அம்மாவை பள்ளியின் தாளாளர் ஜான் ஞானக்கண், தலைமை ஆசிரியர் எபிநேசர் உள்ளிட்டோர் வரவேற்றனர். 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x