Published : 29 Oct 2021 03:10 AM
Last Updated : 29 Oct 2021 03:10 AM

உணவுப் பாதுகாப்பு சட்டங்களை பின்பற்ற வேண்டும் : மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலர் அறிவுரை

பண்டிகை கால இனிப்பு, காரம் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் சேலத்தில் உணவு பாதுகாப்புத்துறை சார்பில் நடந்தது. இதையொட்டி, உணவு தயாரிப்பில் அனுமதிக்கப்பட்ட நிறமிகளின் அளவு தொடர்பான கண்காட்சி நடந்தது. இதை ஆர்வமுடன் பார்வையிட்ட வியாபாரிகள். படம்: எஸ்.குரு பிரசாத்

சேலம்

உணவு தயாரிப்பாளர்கள் உணவுப் பாதுகாப்பு சட்டங்களை பின்பற்ற வேண்டும் என சேலம் மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலர் அறிவுறுத்தியுள்ளார்.

பண்டிகை கால இனிப்பு, காரம் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் உணவுப் பாதுகாப்புத்துறை சார்பில் சேலத்தில் நடந்தது. கூட்டத்துக்கு, மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் கதிரவன் தலைமை வகித்து பேசியதாவது:

உணவுப் பண்டம் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள அனைவரும் கட்டாயம் உணவு பாதுகாப்பு துறையில் பதிவு, உரிமம் பெற்றிருக்க வேண்டும். உணவுப் பண்டம் தயாரிப்புக்கு, தரமான உணவுப் பொருட்கள், பாதுகாக்கப்பட்ட குடிநீர் ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டும். தயாரிக்கப்பட்ட உணவு பொருட்களின் பாக்கெட்டுகளில் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி, அதிகபட்ச சில்லரை விற்பனை விலை ஆகியவற்றை கட்டாயம் குறிப்பிட்டிருக்க வேண்டும்.

அனுமதிக்கப்பட்ட நிறமிகளை அரசு நிர்ணயித்த அளவுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.எண்ணெய்யை மறுசுழற்சி செய்து பயன்படுத்தக் கூடாது. பாக்கெட் அல்லது டின்களில் அடைக்கப்படாத எண்ணெய்களை பயன்படுத்தக்கூடாது. உணவுப் பாதுகாப்பு சட்ட விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x